காஷ்மீரில் 1990களில் நடைபெற்ற பண்டிட்கள் மீதான தாக்குதல்கள், பண்டிட்கள் காஷ்மீரில் இருந்து வெளியேறிய சம்பவங்கள் குறித்தான அரசியலை ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படம் பேசுகிறது. முஸ்லிம்களை எதிரிகளாகவும், தீவிரவாதிகளாகவும் சித்தரிக்கும் இந்தப் படம் இந்தியில் வெளியானது. இதை விவேக் ரஞ்சன் அக்னி கோத்ரி இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் தற்போது ரூ.200 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. இதற்கு காரணம் பாஜக ஆளும் மாநிலங்களில் படத்திற்கு முழு வரி விலக்கு வழங்கப்பட்டதுடன், சில மாநிலங்களில் படம் பார்க்க செல்லும் அரசு ஊழியர்களுக்கு விடுமுறை சலுகையும் வழங்கப்பட்டதுதான்.
தேசத்தின் பிரதமர் நரேந்திர மோடி படக்குழுவினரை நேரில் சந்தித்ததுடன், படத்தை பாராட்டி பேசியதும் அரசியல் அரங்கிலும், சிறுபான்மை சமூகத்தினரிடம் அதிர்வுகளை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தி காஷ்மீர் பைல்ஸ் படத்தினை தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய 4 மொழிகளில் மொழிமாற்றம் செய்து ஏப்ரல் இரண்டாவது வாரம் வெளியிட இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.
**இராமானுஜம்**