கொரோனாவால் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக விஜே அஞ்சனா தெரிவித்துள்ளார்.
பிரபலங்கள் பலரும் தாங்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டதையும் அதன் அனுபவத்தையும் சமூக வலைதளங்கள் வாயிலாக ரசிகர்களுடன் பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் பிரபல தொகுப்பாளினியான அஞ்சனாவும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு ஒரு பதிவை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.
தற்போது கொரோனாவால் தனக்கு ஏற்பட்டுள்ள அனுபவங்கள் குறித்து சமூக வலைதள பக்கங்களில் மனம் திறந்துள்ளார், “கடந்த 14 நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு என்னை தனிமை படுத்தி கொண்டுள்ளேன். இதில் உடல் ரீதியிலான பாதிப்பை விட மனரீதியிலான பாதிப்புதான் எனக்கு அதிகம். காய்ச்சல், உடல் வலி, சோர்வு என எல்லாமே எனக்கு இருந்தது. இந்த நாட்களில் வீட்டு வேலைகள், சமையல், குழந்தையை பார்த்து கொள்வது, அவருடைய வேலை, என்னுடன் பேசுவது என அனைத்தையும் என் கணவரே பார்த்து கொண்டார். அவருக்கு என் நன்றி. முன்பெல்லாம் எனக்காக நேரம் ஒதுக்கவே முடியவில்லை என வருத்த பட்டிருக்கிறேன். ஆனால், இப்போது அவ்வளவு நேரம் கிடைத்தும் என்னால் மகிழ்ச்சியாக செலவளிக்க முடியவில்லை. என் குழந்தையை கொஞ்ச முடியவில்லை. யாரையும் வெளியே பார்க்க முடியவில்லை. என் வேலைகள் எல்லாம் அப்படியே நிற்கிறது.
என் வாழ்வின் மிக கடினமான காலக்கட்டம் என சொல்லும் அளவுக்கு மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளேன். சீக்கிரமே இதில் இருந்து மீண்டு வருவேன். ஆனால், அப்படி உறுதியுடனும் நம்பிக்கையுடனும் மீண்டு வருவதற்கு சில நாட்கள் பிடிக்கும் என்றே நம்புகிறேன். இந்த காலக்கட்டத்தில் என் மீது அன்பு செலுத்தி நம்பிக்கை தரும் அனைவருக்கும் நன்றி” என அதில் நெகிழ்ச்சியாக குறிப்பிட்டுள்ளார் அஞ்சனா.
**ஆதிரா**
�,