பிரமாண்டமான படங்களை எடுப்பது போலவே படத்திற்கான விளம்பர நிகழ்ச்சிகளையும் பிரமாண்டமாக நடத்தும் பணியையும் செய்து வருகிறார் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமவுலி.
தற்போது ராம்சரண், ஜூனியர் என்டிஆர், அஜய் தேவ்கான் ஆகியோர் நடிப்பில் ராஜமவுலி இயக்கியுள்ள ரணம் ரத்தம் ரெளத்திரம் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகள் வேகமெடுத்துவருகின்றன. அந்தவகையில் ஆந்திரா, சென்னை, கேரளா, கர்நாடகா, ஆகிய மாநிலங்களில் படக்குழுவினருடன் பத்திரிகையாளர்களைச் சந்தித்து முடித்துள்ளார் ராஜமவுலி. படத்தின் இந்தி வெளியீட்டிற்கான விளம்பர நிகழ்ச்சியை நடத்த மும்பையில் ஏற்பாடு செய்துள்ளார்.
இந்த நிகழ்ச்சியைப் பிரமாண்டமாகக் காட்டத் தீர்மானித்துள்ள ராஜமவுலி, ஹைதராபாத்திலிருந்து சுமார் 3000 ரசிகர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக மும்பை வருவதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளார்.
இவர்கள் அனைவரும் ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம்சரண் ரசிகர்கள். இந்த மாபெரும் கூட்டத்தைக் கூட்டுவதன் மூலம் இந்தி திரையுலக வட்டாரத்தில் ஆர்ஆர்ஆர் படம் பற்றிய பிரமிப்பை ஏற்படுத்துவதற்கான ராஜமவுலியின் திட்டமிட்ட மாஸ்டர் பிளான் இது என்று சொல்கிறார்கள் சினிமா வட்டாரத்தில்.
வழக்கமாக இது போன்ற செயற்கையான பிம்பத்தை, மாயத்தோற்றங்களை தமிழ்சினிமா கதாநாயக நடிகர்கள் செய்துவந்தனர். படத்தில் கூட்டமான காட்சிகளில் நடிக்க ரசிகர்களை வர வைப்பது, ஆடியோ அல்லது திரைப்பட விழாக்களில் தங்கள் ரசிகர்களை வரவைத்து மாஸ் காட்டுவது என்பது இப்போதும் தொடர்கிறது.
ஒரு படத்தின் வெற்றிக்கு இதுபோன்ற போலித்தனமான பிம்பங்கள் எந்த வகையிலும் வெற்றியைத் தராது என்பதைத் தமிழ் சினிமாவின் கடந்தகால அனுபவங்கள் உணர்த்தியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
**-இராமானுஜம்**
�,