ஆயுத பூஜையை முன்னிட்டு அதிக தேவை காரணமாகத் தமிழகத்தில் வாழைத்தார் விலை உயர்ந்துள்ளது.
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் தினசரி பல்வேறு வகையான வாழைத்தார் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று (செப்டம்பர் 27) பூவன் வாழைத்தார் ஒன்று 250 ரூபாய்க்கு விற்பனையானது. அதேபோல கற்பூரவல்லி வகை வாழைத்தார் அதிகபட்சமாக 300 ரூபாய்க்கு விலைபோனது. மொந்தன் வாழை வகையில் பழம் ஒன்று 7 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று நடந்த ஏலத்தில் மொத்தம் 3000 வாழைத்தார்கள் விற்பனையாயின. பூவன் வகை வாழைத்தார் அதிகபட்சமாக 700 ரூபாய் வரையில் வாங்கப்பட்டது. அதேபோல ரஸ்தாளி வகை வாழைத்தார் அதிகபட்சமாக 400 ரூபாய்க்கும், பச்சைநாடான் வகை வாழைத்தார் அதிகபட்சமாக 450 ரூபாய்க்கும், கற்பூரவல்லி வாழைத்தார் அதிகபட்சமாக 500 ரூபாய்க்கும் வாங்கப்பட்டது.
ஏலத்தில் பங்கேற்ற வாழை விவசாயிகள் கூறும்போது, ஆயுத பூஜையை முன்னிட்டு படையலுக்கு வாழைப்பழங்களுக்கு அதிக தேவை இருப்பதால் வாழைத்தார் விற்பனை அமோகமாக இருந்ததாகத் தெரிவித்தனர். நாளை (செப்டம்பர் 29) ஆயுத பூஜை மற்றும் நாளை மறுநாள் (செப்டம்பர் 30) விஜயதசமி பண்டிகை கொண்டாடப்படுவதை முன்னிட்டு பூஜை மற்றும் பிற தேவைகளுக்காக வாழைக்காய்களைக் கொண்ட தார்கள் ஓரிரு தினங்களுக்கு முன்னரே வாங்கி, பழுக்க வைத்து பழங்களாக விற்பனை செய்யப்படுகிறது.�,