தீபா, தீபக் 2ஆம் நிலை வாரிசுகள்: நீதிமன்றம் தீர்ப்பு!

public

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான வேதா இல்லம் உள்ளிட்ட ரூ.913 கோடி மதிப்புள்ள சொத்துகள் தொடர்பான வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று (மே 27) தீர்ப்பு வழங்கியுள்ளது.

ஜெயலலிதாவின் சொத்துகளை நிர்வகிக்கத் தனி நிர்வாகி நியமிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் கே.கே.நகரைச் சேர்ந்த அதிமுக நிர்வாகியான புகழேந்தி வழக்குத் தொடர்ந்திருந்தார். வேதா இல்லத்தை அரசு நினைவிடமாக மாற்றுவதற்கு ஆட்சேபனை தெரிவித்து, அவரது சொத்துகளை நிர்வகிக்க தங்களை நிர்வாகிகளாக நியமிக்க வேண்டும் என்று தீபக், தீபா சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இவ்வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், அப்துல் குத்தூஸ் அமர்வில் விசாரணை நடந்து வந்தது.

ஜெயலலிதா செலுத்த வேண்டிய ரூ.40 கோடி வருமான வரி பாக்கிக்காக அவர் வசித்த போயஸ் கார்டன் இல்லம் மற்றும் நுங்கம்பாக்கம் பகுதியில் உள்ள சில சொத்துகளை முடக்கி வைத்திருப்பதாக வருமான வரித்துறையும் இந்த வழக்கில் வாதிட்டு வந்தது.

இதற்குத் தீபா, தீபக் தரப்பில் ஜெயலலிதாவின் சொத்துகளுக்கு தங்களை நிர்வாகிகளாக அறிவிக்கும்படியும், ஜெ சொத்து மீதான வருமான வரி பாக்கியை தாங்கள் கட்ட தயாராக இருப்பதாகவும் தெரிவித்தனர்.

இந்த வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், தீர்ப்பினை நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர். இதனிடையே கடந்த மே 22ஆம் தேதி, ஜெயலலிதா வசித்த வேதா இல்லத்தைத் தமிழக அரசு நினைவு இல்லமாக அறிவித்து, நிலத்தைக் கையகப்படுத்துவதற்காக அவசரச் சட்டம் பிறப்பித்தது தமிழக அரசு.

இந்நிலையில் இன்று ஜெ.சொத்து வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இல்லத்தை முழுமையாக நினைவு இல்லமாக மாற்றும் திட்டத்தை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஜெயலலிதா இல்லத்தின் ஒரு பகுதியை நினைவு இல்லமாகவும் மற்றொரு பகுதியை முதல்வரின் அதிகாரப்பூர்வ இல்லமாகவும் மாற்றவும் சென்னை உயர் நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது.

அதோடு ஜெயலலிதா சொத்துக்களை நிர்வகிக்க அவரின் அண்ணன் மகளான ஜெ. தீபா மற்றும் ஜெ. தீபக் ஆகியோருக்கும் உரிமையுள்ளது என்று தெரிவித்து அவர்களை இரண்டாம் நிலை வாரிசுகளாகவும் அறிவித்துள்ளது. ஜெயலலிதாவின் சொத்துகளின் ஒரு பகுதியில் அறக் கட்டளை அமைக்கலாம் என்று யோசனை தெரிவித்த நீதிமன்றம் இது தொடர்பாக 8 வாரக் காலத்திற்குள் தமிழக அரசு பதில் அளிக்கவும் உத்தரவிட்டுள்ளது.

அதுபோன்று ஜெயலலிதா சொத்துக்களை நிர்வகிக்கத் தனி நிர்வாகியை நியமிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களைச் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

**-கவிபிரியா**�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *