தடையை மீறி திருவல்லிக்கேணியில் இன்று காலை (ஜூன்,16) சென்னை மாநிலக் கல்லூரி மாணவர்கள் பேருந்து தின கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
கல்லூரி மாணவர்களில் சிலர் குழுவாகச் சேர்ந்து ஆண்டுதோறும் பஸ் டே என்ற பெயரில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த கொண்டாட்டத்தின்போது கல்லூரி மாணவர்கள் பொதுமக்களை பாதிக்கும் வகையில் பேருந்து கூரையின் மீது ஏறுவது, பேருந்து ஜன்னல்களில் தொங்குவது, பெண்களைக் கேலி செய்வது, பேருந்துக்குள் ஆடிப் பாடுவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். மேலும், கல்லூரியின் பெயர் பேனர் வைத்துக் கொண்டாட்டங்களில் ஈடுபடும்போது மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டு சில நேரங்களில் இதுபோன்ற கொண்டாட்டம் வன்முறையாக மாறுகிறது. அது தவிர கைகளில் பிடி இல்லாமல் மேற்கூரையில் மாணவர்கள் பயணிக்கும்போது தவறி விழுந்து விபத்து ஏற்படும் வாய்ப்பு உள்ளது. மகிழ்ச்சியைத் தாண்டி இதில் பல சிக்கல்கள் இருந்ததால், இதுபோன்ற கொண்டாட்டங்களுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்தது. தடையை மீறும் மாணவர்களைக் கைது செய்யவும் உத்தரவிட்டது.
இந்நிலையில், இன்று (ஜூன்,16) காலை சென்னை திருவல்லிக்கேணியில் 27H பேருந்தில் மாநிலக் கல்லூரி மாணவர்கள் பேருந்து தின கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, பேருந்துக்கு மாலை அணிவித்தும் பேனர் கட்டியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், இருசக்கர வாகனங்களில் பாரதி சாலை வழியாக மாநிலக் கல்லூரி வரைக்கும் பேரணியாகச் சென்றனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வேலைக்குச் செல்லும் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். மாணவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தியும், மணவர்கள் ஆட்டம் பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த ஆண்டு ஜூன் மாதம்,சென்னை 27H பேருந்தில் மாநில கல்லூரி மாணவர்கள் பஸ் தின கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, போலீஸார் அந்தப் பேருந்தை தடுத்து நிறுத்தி கல்லூரிக்குள் அனுப்பி வைத்தனர். அதைத் தொடர்ந்து, சென்னையில் தினமும் காலை 8 மணியில் இருந்து 9 மணி வரை பேருந்து நிறுத்தங்களில் குறிப்பாக மாணவர்கள் பயணம் செய்யும் பேருந்து வழித்தடங்கள் உள்ள பகுதிகளில் போலீஸார் பணியில் ஈடுபடுவார்கள் என்றும், பிற்பகலில் கல்லூரி முடியும் நேரத்திலும் இதுபோல் போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்படும் என்று முடிவு செய்யப்பட்டது என்பது நினைவுகூரத்தக்கது.�,