நீதிபதி குன்ஹா
நாடு முழுவதும் எதிர்பார்க்கப்பட்ட மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர்மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா இறந்ததால் அவரைத் தவிர்த்து, சசிகலா உள்பட 3 பேரும் குற்றவாளி என அறிவித்து, அவர்கள் அனைவரும் உடனடியாக சரணடைய வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சசிகலா உள்பட 3 பேரும் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு, தண்டனை வழங்கி அதிரடியாக தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டது. இந்த வழக்கில் எதிர்பாராதவிதமாக ஜெயலலிதா இறந்ததால் அவரை இந்த வழக்கிலிருந்து விடுவித்தது. மேலும் தண்டனை வழங்கப்பட்ட 3 பேருக்கும் 4 ஆண்டு சிறைத் தண்டனையும், தலா ரூ. 10 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, அவர்கள் அனைவரும் உடனடியாக சரணடைய வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். இதுகுறித்து பெண் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்களின் கருத்துகளைக் கேட்டோம்…
சல்மா, எழுத்தாளர், திமுக மகளிரணி துணைச் செயலாளர்
இந்தத் தீர்ப்பானது ஊழல் செய்த அரசியல்வாதிகளுக்கு பெரும் எச்சரிக்கையாக அமைந்துள்ளது. அரசியலுக்கு வந்தால் சம்பாதித்து செட்டில் ஆகிவிடலாம் என்ற எண்ணம் நிச்சயமாக மாறும். அரசியலுக்கு வர வேண்டும் என்று நினைப்பவர்கள், மக்களுக்கு தொண்டு செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் மட்டும்தான் வர வேண்டும். எளிதாக சொத்து சம்பாதிக்கலாம் என நினைத்து வரக்கூடாது என்று தளபதி ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். அதையே நான் முன்மொழிகிறேன். குன்கா எழுதிய தீர்ப்புதான் சரி என்று வந்துள்ளதும், தேர்தலில் நிற்க 10 ஆண்டுகள் தடையை இந்த தீர்ப்பு கொடுத்துள்ளதும் வரவேற்கத்தக்கது என்றாலும், இது தாமதமாக கொடுக்கப்பட்ட நீதி. 21 ஆண்டுகள் இந்த வழக்கு நடைபெற்று, இப்போது தீர்ப்பு வரும்போது ஜெயலலிதா உயிருடன் இல்லை. எனவே, ஊழல் வழக்கில் உடனடியாக விசாரணை செய்து தீர்ப்புக் கொடுப்பது அவசியம்.
பனிமலர், தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்பாளர்
சசிகலா மீது வெறுப்பின் உச்சத்தில் இருந்த மக்களுக்கு இந்தத் தீர்ப்பு மகிழ்ச்சியை வழங்கியுள்ளது. சசிகலா, சமீபமாக அரசியலில் காட்டிவந்த அதீத ஆர்வம், முதல்வர் நாற்காலியில் எப்படியாவது உட்கார்ந்துவிட வேண்டும் என்ற உந்துதலில் அவர் செய்த செயல்கள் மக்களிடையே பெரும் வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக-வை எடுத்துக்கொண்டால் இந்தியாவில் மூன்றாம் பெரிய கட்சி, அதில் உள்ள எம்.பி.,க்களை வைத்துக்கொண்டு மத்திய அரசில் பேசி எப்படியாவது சாதகமான தீர்ப்பை வாங்கிவிடலாம் என்று கணக்குப் போட்டார் சசிகலா. ஆனால் மத்திய அரசு, அவருக்கு எந்தவித ஆதரவையும் அளிக்கவில்லை என்பதை இந்தத் தீர்ப்பு சுட்டிக் காட்டுகிறது. ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது யாரையும் பார்க்கவிடாமல் செய்ததில் சசிகலாவின் மீது வெறுப்பும், கவனமும் குவிந்துள்ளதால் இந்த வழக்கின் தீர்ப்பை இந்தியாவே எதிர்பார்த்தது. 10 ஆண்டுகள் சசிகலாவால் தேர்தலில் நிற்க முடியாமல் செய்ததை தீர்ப்பின் முக்கிய விஷயமாகக் கருதலாம். இதன்மூலம் தமிழ்நாடும் தமிழ்நாட்டு மக்களும் சசிகலாவிடமிருந்து தப்பித்துள்ளார்கள். ஜெயலலிதாவோடு பல ஆண்டுகள் இருந்தது மட்டும் ஒருவருக்கு எந்தவிதமான அரசியல் தகுதிகளையும் வழங்கிவிடாது. நீண்டநெடிய காலம் கட்சியில் பல்வேறு பணிகள் ஆற்றி மக்களுக்காக உழைத்தவர்களால் மட்டுமே நல்லாட்சியைத் தர முடியும்.
ஆர் ஜே ரோகிணி, திரைப்பட விமர்சகர்
21 வருடங்களுக்குப் பிறகு இந்தத் தீர்ப்பு இப்போது வந்துள்ளதில் மத்திய அரசின் அழுத்தம் இருக்குமோ என்ற சந்தேகம் நடுநிலையில் உள்ள எங்களை மாதிரியானவர்களுக்கு இருக்கிறது. இத்தனை ஆண்டுகள் கழித்து வந்துள்ள தீர்ப்பில் வெறும் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை என்பது ஏமாற்றம் தருவதாக உள்ளது. ஜெயலலிதா இன்று உயிருடன் இல்லை. சசிகலா வெறும் நான்கு ஆண்டுகளில் வெளிவந்து, மீண்டும் கட்சியின்மீது அதிகாரம் செலுத்தலாம். தேர்தலில் நிற்க 10 ஆண்டுகள் தடை என்பதுதான் இந்தத் தீர்ப்பின் மிக முக்கிய அம்சம். அதுவும் சமீபத்தில் வந்துள்ள சட்டத் திருத்தம்தான்.
�,”