ஜெயலலிதா செய்த உதவியை மறந்து நடிகர் கமல்ஹாசன் பேசிவருகிறார் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கமல்ஹாசனுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
சேலம் மாவட்டத்தில் நேற்று பல்வேறு அரசு நலத்திட்டப் பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில் 65 வயதிற்குப் பிறகுதான் கமலுக்கு ஞானோதயம் வந்துள்ளது. விஸ்வரூபம் படம் வெளியாவதற்கு உதவி புரிந்தவர் ஜெயலலிதா. அந்த நன்றியை மறந்து பேசுகிறார். ஆட்சி தொடரக்கூடாது என்கிறார் கமல். எந்த கிராமத்திற்காவது சென்று அவர் மக்களை சந்தித்து இருப்பாரா? குற்றம் சாட்டுபவர்கள் அதிமுக ஆட்சியில் என்ன குற்றம் கண்டார்கள்? என்று கண்டனம் தெரிவித்தார்.
நடிகர் கமல்ஹாசன் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு தனியார் டி.வி.க்கு பேட்டியளித்தபோது, தமிழ்நாட்டில் தற்போதுள்ள அரசு நான்காண்டுகளுக்கு தொடரக்கூடாது, பொதுத் தேர்தல் வேண்டும் என உள்ளிட்ட பல்வேறு கருத்துக்களையும் கூறினார். இதற்கு அதிமுக சார்பில் கண்டன குரல் எழுப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நடிகர் கமல் கருத்துக்கு பதில் தெரிவித்து பேசியதோடு, நடிகர் கமல்ஹாசன் நன்றி மறந்தவர் என்றும் பதிலடி கொடுத்து பேசியுள்ளது சினிமா உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.�,