�
கடந்த ஆண்டில் 11 மாநிலங்களில் வேலை வாய்ப்பின்மை பிரச்சினை அதிகளவில் இருந்ததாகக் கூறியுள்ளது தேசிய மாதிரி கணக்கெடுப்பு அமைப்பு. அதில் தமிழகமும் இடம்பெற்றுள்ளது.
மத்திய அரசு அமைப்பான தேசிய மாதிரி கணக்கெடுப்பு அமைப்பு, 2017-18ஆம் ஆண்டில் ஒவ்வொரு மாநிலத்திலும் நிலவும் வேலைவாய்ப்பின்மை குறித்துக் கணக்கெடுப்பு நடத்தியது. ஆறு ஆண்டுகளுக்கு முன்னர், 2011-12இல் இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டிருந்தது. 6 ஆண்டுகளுக்கு முன்னர் வேலை வாய்ப்பின்மை 2.3 சதவிகிதமாக இருந்தது. அது தற்போது 6.1 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.
தமிழ்நாட்டில் முந்தைய கணக்கெடுப்பின்போது வேலை வாய்ப்பின்மை 2.2 சதவிகிதமாக இருந்தது. தற்போது 7.6 சதவிகிதமாக அதிகரித்து உள்ளது என்று இந்த கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது.
2011-12 கணக்கெடுப்பின்போது ஹரியானா, அசாம், ஜார்க்கண்ட், கேரளா, ஒடிசா, உத்தராகண்ட், பிகார் ஆகியன வேலை வாய்ப்பின்மை பிரச்சினையில் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களாக இருந்தன. தற்போதைய கணக்கெடுப்பில் பஞ்சாப், தமிழ்நாடு, தெலங்கானா, உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் இந்த வரிசையில் இணைந்துள்ளன. கேரள மாநிலத்தில் தான் வேலை வாய்ப்பின்மை அதிகமாக உள்ளது. ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் வேலை வாய்ப்பின்மை 6.7 சதவிகிதம் ஆக இருந்து, இப்போது 11.4 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. ஹரியானாவில் வேலைவாய்ப்பின்மை 8.6 சதவிகிதமாக உள்ளது.
வேலைவாய்ப்பின்மை பிரச்சினை அதிகமில்லாத மாநிலமாக சத்தீஸ்கர் திகழ்கிறது. ஆனால், அங்கும் 1.5 சதவிகிதமானது தற்போது 3.3 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.
�,