தமிழ்த் திரையுலகில் பாலியல் தொல்லைகளை தடுக்க தென்னிந்திய நடிகர் சங்கத்தில் 9 பேர் கொண்ட ‘மீ டூ’ குழு அமைக்கப்படவுள்ளது.
கடந்த ஒரு வருடமாக ‘மீ டூ’ இயக்கம் பணிபுரியும் இடத்தில் பெண்களுக்கு நிகழும் பாலியல் தொல்லைகளுக்கு எதிராக போராடி வருகிறது. இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் என திரையுலகில் மீ டூ இயக்கம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
பட வாய்ப்புகளுக்காக நடிகைகளை தங்கள் தேவைகளுக்கு அழைக்கும் நடிகர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் பெயர்களை நடிகைகள் வெளியிட்டனர். தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் நடிகை ஸ்ரீ ரெட்டி முக்கிய நடிகர்களின் பெயரை வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து பாடகி சின்மயி, பாடலாசிரியர் வைரமுத்துவுக்கு எதிராகப் பாலியல் புகார் கூறினார்.
தெலுங்கு திரையுலகில் நடக்கும் பாலியல் அத்துமீறல்களை விசாரிக்க, தடுக்க 25 பேர் கொண்ட குழு சில தினங்களுக்கு முன் அமைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து தமிழ்த் திரையுலகில் தென்னிந்திய நடிகர்கள் சங்கம் சார்பில் மீ டூ ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்படவுள்ளது. இந்த குழுவின் தலைவராக நடிகர் சங்கத் தலைவர் நாசர் செயல்படுவார். உறுப்பினர்களாக விஷால், கார்த்தி, பூச்சி முருகன், குஷ்பு, ரோகிணி, சுஹாசினி மற்றும் சமூக ஆர்வலர், வழக்கறிஞர் உட்பட 8 பேர் இக்குழுவில் பணியாற்றுவர்.
மலையாளம், இந்தி, தெலுங்கு திரைப்பட உலகம் முன்னரே சுதாரித்து இதனை கவனமாக கையாள முடிவுகள் எடுத்து முன்னோக்கி செல்லும் சமயத்தில் தாமதமாக இருப்பினும் நடிகர்கள் சங்கத்தின் இம்முடிவு பாராட்டத்தக்கது. மீ டூ குழு அமைக்கப்படுவதன் மூலம் தமிழ் சினிமாவில் பாலியல் தொல்லைகள் கட்டுப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.�,