புதுவை மாநில ஆளுநர் தனது அதிகாரத்தை மீறிச் செயல்படுவதால் ஆளுநரை திரும்பப் பெற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
புதுவையில், மாநில முதல்வர் நாராயணசாமிக்கும் துணை நிலை ஆளுநர் கிரண்பேடிக்கும் இடையே மோதல் போக்கு தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இந்நிலையில், ஆளுநர் கிரண்பேடி, நியமன எம்.எல்.ஏ.க்களின் பதவிகளுக்குப் பரிந்துரைத்து அவரே நியமனம் செய்ததால் இருவருக்கும் இடையிலான மோதல் மேலும் பெரிதாகியுள்ளது.
இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி, அம்மாநிலத்தின் நியமன எம்.எல்.ஏ. பதவிகளுக்கு பாஜகவினர் பெயர்களைப் பரிந்துரை செய்திருப்பதுடன் அவர்களுக்கு ஜூலை 4-ஆம் தேதி பதவிப் பிரமாணமும் செய்து வைத்துள்ளார். இந்த நடவடிக்கை ஜனநாயகத்தைக் கேலிக்கூத்தாக்குவதாக அமைந்திருக்கிறது. இதுவரையில் புதுவையில் நியமன எம்.எல்.ஏ.க்களை நியமிக்க, அம்மாநில ஆளும் அமைச்சரவை பரிந்துரைத்த பின், அந்தப் பரிந்துரையை மத்திய உள்துறை அமைச்சகம் அங்கீகரித்து நியமனம் செய்யப்பட்டு வந்தது. தற்போது ஆளுநரே பாஜகவினர் பெயர்களை பரிந்துரைத்து, நியமிக்கப்பட்டிருப்பது முறையான செயல்பாடாக இல்லை. இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
ஊழல் எதிர்ப்பாளராகவும் லோக்பாலுக்காக போராடுபவராகவும் தன்னை காட்டிக் கொண்ட புதுச்சேரி ஆளுநர் மத்திய பாஜக அரசின் கைப்பாவையாக செயல்படுகிறார் என்று இதன் மூலம் நிரூபணமாகியுள்ளது. ஆளுநரை தங்கள் அரசியல் நோக்கத்திற்காக பாஜக அரசு பயன்படுத்தி வருகிறது என்பதும் இதன் மூலம் தெளிவாகின்றது. இந்த நியமனத்தை ரத்து செய்ய வேண்டுமென்றும், துணைநிலை ஆளுநரை திரும்பப் பெற வேண்டுமென்றும் வலியுறுத்தி புதுச்சேரியில் இடதுசாரி, ஜனநாயக கட்சிகள் ஜூலை 8-ஆம் தேதி முழுஅடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளன. அந்த முழு அடைப்பு போராட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு ஆதரவு தெரிவிக்கிறது. மேலும் எம்.எல்.ஏ.க்கள் நியமனத்தை ரத்து செய்வதோடு, மாநில அரசுடன் ஒத்துப் போவாமல் தன்னிச்சையாக செயல்படும் ஆளுநரை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்” என்று அவர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.�,