தனது சேவையை பயன்படுத்தும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வரும் மார்ச் 31ஆம் தேதி வரை அனைத்து சேவைகளும் இலவசமாக வழங்கப்படும் என்று ஜியோ அறிவித்தது. ஜியோவின் இந்த அறிவிப்பால் ஈர்க்கப்பட்ட பல கோடி வாடிக்கையாளர்கள் ஜியோ சேவையை பயன்படுத்தத் துவங்கினர். ஜியோ சேவையை பயன்படுத்த துவங்கிய அடுத்து சில வாரங்களில் வாய்ஸ் கால்களில் சில தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்பட்டதால் வாடிக்கையாளர்கள் அதிருப்தி அடைந்தனர். இந்தக் குளறுபடிகளை சரிசெய்ய, தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டதன் மூலம் ஜியோ தனது வாடிக்கையாளர்களை தக்கவைத்துக் கொண்டது.
இருப்பினும் இந்த பிரச்னை முழுமையாக சரி செய்யப்படவில்லை. மேலும், வருகிற ஏப்ரல் மாதம் முதல் ஜியோ தனது வாடிக்கையாளர்களிடம் கட்டணம் வசூலிக்கப்போவதாக அறிவித்ததைத் தொடர்ந்து வாடிக்கையாளர்கள் ஜியோ பயன்படுத்துவதை நிறுத்திவிடுவார்கள் என்று பரவலாகப் பேசப்பட்டு வந்தது. இந்நிலையில், ’பெர்ன்ஸ்டெயின்’ என்ற ஆய்வு நிறுவனம் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் நம்பகத்தன்மை குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் ஜியோ முதலிடம் பிடித்துள்ளது தெரியவந்துள்ளது.
இந்தியா முழுவதிலும் இருந்து 1,000 வாடிக்கையாளர்களிடம் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில், 67 சதவிகிதத்தினர் ஜியோ சேவையை இரண்டாம்பட்ச தேர்வாகவே தற்போது பயன்படுத்தி வருவதாகவும், இதில் 63 சதவிகிதத்தினர் ஜியோ சேவையை தங்களின் முதன்மை தேர்வாக மாற்ற திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். 28 சதவிகிதத்தினர் தாங்கள் தொடர்ந்து ஜியோ சேவையை இரண்டாம் தேர்வாகவே பயன்படுத்தப் போவதாகவும் மீதமுள்ள 2 சதவிகிதத்தினர் ஜியோ சேவையைப் பயன்படுத்தப்போவதில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.�,