காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக தமிழகம் முழுக்க போராட்டங்களும், காவிரி உரிமை மீட்பு நடை பயணமும் நடைபெற்று வரும் நிலையில் பிரதமர் மோடியின் தமிழக வருகை உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.
சென்னையை அடுத்து மாமல்லபுரம் அருகே உள்ள திருவிடந்தையில் ராணுவ கண்காட்சி நடைபெறுகிறது. இந்த கண்காட்சியில் கலந்துகொள்ள பிரதமர் மோடி 12-ம் தேதி சென்னை வருகிறார்.
இதுபற்றிய பிரதமரின் பயணத் திட்டமிட்டல் விவரம் தெரியவந்திருக்கிறது.
12-ம் தேதி காலை 6.40 மணிக்கு டெல்லியில் இருந்து தனி விமானத்தில் புறப்படும் மோடி, காலை 9.20-க்கு சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் வந்தடைகிறார். அங்கிருந்து தனி ஹெலிகாப்டரில் புறப்பட்டு காலை 9.50 மணியளவில் மாமல்லபுரம் செல்கிறார் மோடி. அங்கிருந்து காரில் புறப்பட்டு ராணுவக் கண்காட்சி நடக்கும் திருவிடந்தைக்கு செல்கிறார். அங்கே ராணுவக் கண்காட்சியை துவக்கி வைத்துவிட்டு, மீண்டும் மீனம்பாக்கம் திரும்பும் மோடி சென்னை அடையாறில் இருக்கும் புற்று நோய் ஆராய்ச்சி நிலையத்தின் வைர விழா கட்டிட நிகழ்விலும் கலந்துகொள்கிறார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக தமிழகத்தில் கடுமையான போராட்டங்கள் நடந்து வரும் நிலையில், ‘பிரதமர் மோடி உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் யார் தமிழகத்துக்கு வந்தாலும் கறுப்புக் கொடி காண்பிப்போம்’ என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்திருந்தது குறிப்பிடத் தக்கது.
எனவே பிரதமர் வருகை தொடர்பான பாதுகாப்பு ஏற்பாடுகள் இப்போதே பலப்படுத்தப்பட்டுள்ளன.�,