டிடிவி தினகரனை துணைப் பொதுச் செயலாளராகக் கொண்டு செயல்படும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்துக்கு, குக்கர் சின்னமோ வேறு ஏதேனும் பொது சின்னமோ கிடைக்குமா என்பது இன்று தெரியவரும்.
கடந்த பிப்ரவரி மாதம் 28ஆம் தேதி டெல்லி உயர் நீதிமன்றம் இரட்டை இலை ஓபிஎஸ் தரப்புக்கே என்று தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து சசிகலா, தினகரன் தரப்பிலிருந்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதில், இரட்டை இலைச் சின்னத்தை முடக்கி வைக்க வேண்டுமெனவும் இடைக்காலமாக தங்களுக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டிருந்தது.
இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று தினகரன் தரப்பு உச்ச நீதிமன்றத்தில் மென்ஷன் செய்தது.
ஆனால், தினகரனின் மேல்முறையீட்டு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் மார்ச் 15 ஆம் தேதி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், தீபக் குப்தா, சஞ்சீவ் கண்ணா ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது தேர்தல் ஆணையத்தின் சார்பில் யாரும் ஆஜராகவே இல்லை. அதன் பின் ஒன்பது நாட்கள் விடுமுறைக்குப் பின் இன்றுதான் உச்ச நீதிமன்றம் செயல்படத் தொடங்குகிறது. நாளை மார்ச் 26 ஆம் தேதி மக்களவைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் முடிவு அடையும் நிலையில் இன்று மார்ச் 25 ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வருகிறது.
இன்று தேர்தல் ஆணையம் அளிக்கும் பதில், அதைப்பொறுத்து உச்ச நீதிமன்றம் அளிக்கும் உத்தரவு ஆகியவற்றை வைத்தே தினகரனுக்கு குக்கர் சின்னமோ அல்லது வேறு ஏதேனும் பொதுச் சின்னமோ கிடைக்குமா என்று தெரியவரும்.�,