தமிழகத்தில் சட்டசபை தேர்தலில் அதிமுக 134 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. மே 23ஆம் தேதி முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவை பதவியேற்றது. பதவியேற்ற அன்றே 5 கோப்புகளில் கையெழுத்திட்டார். அதில் தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கு என்ற திட்டத்தை செயல்படுத்த முதற்கட்டமாக டாஸ்மாக் கடைகளின் நேரத்தைக் குறைப்பதும், 500 கடைகளை மூடுவது என்பதும் ஒன்றாகும். டாஸ்மாக் கடைகளில் நேரக்குறைப்பு, கையெழுத்திட்ட மறுதினத்திலிருந்தே நடைமுறைக்கு வந்தது. இந்நிலையில், இன்று (19.06.16) முதல் தமிழகத்தில் உள்ள 500 டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கு முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
எந்த மண்டலத்தில் எவ்வளவு கடைகள்?
சென்னை மண்டலம்: 58, திருச்சி மண்டலம்: 133, மதுரை மண்டலம்: 201, கோவை மண்டலம்: 60, சேலம் மண்டலம்: 48.
எந்த ஊரில் எவ்வளவு?
சென்னை (7), காஞ்சிபுரம் (16), திருவள்ளூர் (35), கோவை (5), திருப்பூர் (8), ஈரோடு (16), நீலகிரி (31), மதுரை (37), திண்டுக்கல் (10), ராமநாதபுரம் (36), விருதுநகர் (27), சிவகங்கை (43), திருநெல்வேலி (9), தூத்துக்குடி (30), கன்னியாகுமரி (6), தேனி (3), திருச்சி (14), நாகப்பட்டினம் (16), தஞ்சாவூர் (16), புதுக்கோட்டை (14), கடலூர் (15), கரூர் (14), திருவாரூர் (8), விழுப்புரம் (29), பெரம்பலூர் (7), தர்மபுரி (1), கிருஷ்ணகிரி (6), நாமக்கல் (11), வேலூர் (8), திருவண்ணாமலை (18), அரக்கோணம் (4).
மாற்றுப்பணி: இந்த 500 கடைகளில் பணிபுரிந்து வரும் பணியாளர்களுக்கு மாற்றுப்பணிகள் வழங்கப்பட இருக்கின்றன. அதற்கான தனி அரசாணை பிறப்பிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த 500 டாஸ்மாக் கடைகளில் மொத்தம் 2,500 பணியாளர்கள் இருக்கிறார்கள். இவர்களுக்கான உடனடி பணியாகச் சிலருக்கு, ஆள் பற்றாக்குறை இருக்கும் டாஸ்மாக் கடைகளில் வேலை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக டாஸ்மாக் அதிகாரிகள் நம்மிடம் தெரிவித்தனர். மேலும், 10% அளவுக்குக் கிட்டத்தட்ட 250 பேரை ‘ரிசர்வ்டு தொழிலாளர்களாக’ வைத்திருக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் வட்டாரத்தில் சொல்லப்படுகிறது. இதுகுறித்த விரிவான தகவல்கள், அரசாணை வெளியிடப்படும் போதுதான் தெரியவரும்.
எதிர்க்கட்சிக்குச் சவால்: நாளை முதல் சட்டமன்றத்தில் விவாதம் நடைபெற இருக்கிறது. ஆளுநர் உரை மீதான விவாதத்தில் திமுக உறுப்பினர்கள் உரையாற்ற இருக்கின்றனர். அரசின் அறிவிப்புகள் குறித்து அதில் கேள்விகளை எழுப்ப திமுக திட்டமிட்டிருந்தது. இந்நிலையில், அரசு 500 கடைகள் மூடப்படும் என்று அறிவித்திருப்பது எதிர்க்கட்சியான திமுக-வுக்கு ஒரு சவால். அதனால், மூடப்படும் கடைகள் எங்கிருக்கின்றன? அவற்றின் வருமானம் என்ன? போன்ற தகவல்களைத் திரட்ட திமுக தொடங்கியிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.�,