மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகிற்குக் கடந்த ஆண்டு மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வன அமைச்சகம் ஒப்புதல் அளித்திருந்தது. மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகை வர்த்தகத்திற்கு அனுமதிப்பது குறித்து முடிவெடுக்க இதற்கு முன்னர் நடந்த சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் மரபணு பொறியியல் மதிப்பீட்டுக் குழு கூட்டத்தில் இது பற்றி பேசி ஆலோசித்து எந்தவொரு தெளிவான முடிவும் எடுக்கப்படவில்லை என்றும், அதை வர்த்தகத்திற்கு அனுமதிப்பது குறித்து பரிசீலித்து முடிவு எடுக்கப்படும் என்றும் மூத்த அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகு உற்பத்தி செய்து வர்த்தகத்திற்கு அனுமதிக்க மத்திய சுற்றுச்சூழல் ஆணையம் அனுமதி அளித்தது. அதே சமயம் இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கடும் எதிர்ப்புகளும் வந்தன. மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகை உண்பதால் உடலுக்கு பல்வேறு கேடுகள் ஏற்படும்; எனவே இதைத் தடை செய்ய வேண்டும் என்றும் பலர் கோரிக்கை விடுத்தனர். அப்போது மத்திய அமைச்சகம் பொதுமக்கள், பங்குதாரர்கள் ஆகியோரிடம் ஒரு கருத்துக்கணிப்பு நடத்தியது. அதில் மொத்தம் 759 கருத்துகள் பதிவாகின. அந்தக் கருத்துகள் அதன் துணைக் குழுவிற்கு அனுப்பப்பட்டது. ஆனால் துணைக் குழு அதற்கு முன்னரே அறிக்கையைத் தாக்கல் செய்துவிட்டது. தற்போது அந்தக் கருத்துகள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றும் அந்த அதிகாரி தெரிவித்தார்.
மரபணு மாற்றம் செய்யப்படாத உயர் ரக விதைகள் ஏற்கனவே, சந்தையில் கிடைக்கும்போது, மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகைக் கொண்டு வருவதற்கான அவசியம் என்ன, என்றும், ஏற்கனவே உற்பத்தி அதிகரிப்பிற்காக, மரபணு மாற்றப்பட்ட பருத்தி ரகம் இந்தியாவில் அனுமதிக்கப்பட்டு பெரும் இழப்பைச் சந்தித்தபோது ஆயிரக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர் என்றும், தற்போது மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகை அனுமதித்தால், பருத்தி விவசாயிகளுக்கு ஏற்பட்ட நிலைமையே தங்களுக்கும் ஏற்படும் என்றும் விவசாயிகள் வேதனையோடு தெரிவிக்கின்றனர்.
மேலும் மரபணு மாற்றம் செய்யப்பட்ட உணவுப் பொருட்களின் பாதுகாப்பை இதுவரை எந்த ஆய்வுகளும் உறுதி செய்யவில்லை என்றும், விதையை விற்கும் மான்சாண்டோ நிறுவனமே அந்த ஆய்வை மேற்கொண்டு வருவதாகவும் விவசாயிகள் மிகுந்த அச்சத்தோடு கூறுகின்றனர்.�,