வெங்காய விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வரும் நிலையில், பாதுகாப்புக்காக விற்பனையாளர்கள் ஹெல்மெட் அணிந்து விற்று வருகின்றனர்.
தமிழகம், டெல்லி, மும்பை ஆகிய பகுதிகளில் வெங்காயம் ரூ.120க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனைக் குறைக்க வேண்டும் என்று பொதுமக்கள், அரசியல் கட்சிகள் என பல தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். வெங்காய விலை குறையுமா என்ற எதிர்பார்ப்பே தற்போது அனைவரிடத்திலும் உள்ளது.
விலை உயர்வைக் கட்டுப்படுத்த ரேஷன் கடைகள், கூட்டுறவு சந்தைகளில் வெங்காயத்தை விற்பனை செய்ய மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. அந்தவகையில் பிகார் மாநில கூட்டுறவு சந்தை படுத்துதல் சங்கத்தின் சார்பில் மானிய விலையில் வெங்காயம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மாநிலத்தின் ஆரா உட்பட பல பகுதிகளில் ரூ.35க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதனால் நீண்ட வரிசையில் போட்டிப் போட்டுக் கொண்டு வெங்காயம் வாங்குவதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. சில இடங்களில் வெங்காயம் விற்பனை செய்யும் ஊழியர்கள் மீது கல்வீச்சு தாக்குதல் சம்பவங்களும் நடைபெறுகின்றன.
இதனால் பாதுகாப்பிற்காக வெங்காயம் விற்பனை செய்பவர்கள் ஹெல்மெட் அணிந்து விற்பனை செய்து வருகின்றனர். இதுகுறித்து கூட்டுறவு அங்காடி ஊழியரான ரோஹித் குமார், பிகார் அரசு, கூட்டுறவு அங்காடி மூலம் குறைந்த விலையில் வெங்காயம் விற்பனை செய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் அதிகளவில் திரண்டு வருவதால் கல்வீச்சு சம்பவங்களும், கலவரங்களும் ஏற்படுகிறது.
இதில் எங்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிறது. பாதுகாப்பு வசதிகளும் செய்து தரப்படவில்லை. வேறு வழியின்றி பாதுகாப்புக்காக ஹெல்மெட் அணிந்து வெங்காயம் விற்பனை செய்து வருகிறோம்’ என்று தெரிவித்துள்ளார்.
�,