கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டதும் தமிழகத்தில் அனைவருக்கும் இலவசமாகப் போடப்படும் என்று அறிவித்து தமிழக மக்களுக்கு இன்ப அதிர்ச்சியைக் கொடுத்துள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
தமிழகத்தில் கொரோனா பரவல் தொடங்கியது முதலே, தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது முதல் மருத்துவ வல்லுநர்கள், மாவட்ட ஆட்சியாளர்களுடன் ஆலோசனை நடத்தி முக்கிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறார் முதல்வர் பழனிசாமி.
கடந்த செப்டம்பர் மாதத்தில் ஒரு சில துறைகளைத் தவிரப் பலவற்றுக்கும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. அப்போதும், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, [இந்த முடிவை முழுமனதாக எடுக்கவில்லை. ஒவ்வொருவரது உயிரும் முக்கியம் என்று கூறியதாகக் கோட்டை வட்டார தகவல்கள் தெரிவித்தன.](https://www.minnambalam.com/public/2020/09/08/25/decision-to-set-up-2000-mini-clinic-in-tamil-nadu-says-cm-edappady-palanisami)
இந்த சூழலில் இன்று (அக்டோபர் 22) முதல்வர் எடப்பாடி பழனிசாமி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். உயிர்க்கொல்லி நோயான கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கப்பட்டால், அதன் விலை அதிகமாக இருக்குமோ என்ற அச்சம் தமிழக மக்கள் மத்தியிலிருந்து வந்த நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொரோனா நோய் குணமடைய மருந்து கண்டுபிடிக்கப்பட்டதும், தமிழகத்தில் அனைவருக்கும் அரசு செலவில் தடுப்பூசி வழங்கப்படும்” என்று அறிவித்துள்ளார்.
புதுக்கோட்டையில் இன்று பல்வேறு புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய முதல்வர் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த போது இவ்வாறு தெரிவித்தார். அதுபோன்று தமிழகம் முழுவதும் மேற்கொள்ளப்பட்டுள்ள வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் விவரித்தார்.
முன்னதாக பிகார் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு தேர்தல் அறிக்கை வெளியிட்ட பாஜக, பிகாரில் பாஜக ஆட்சிக்கு வந்தால் மாநிலம் முழுவதும் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று அறிவித்தது. இந்நிலையில், தேர்தல் அறிக்கையில் தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என்று கூறி வாக்கு கேட்கும் அளவுக்கு ஒரு கட்சி போகக்கூடாது என சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்தன. இதுகுறித்து பாஜக ஊடகப் பிரிவு நிர்வாகி மால்வியா, “மத்திய அரசு மாநில அரசுக்குக் குறைந்த விலையில் கொரோனா தடுப்பூசிகளை வழங்கும். ஆனால் அதை இலவசமாக வழங்கலாமா, இல்லையா என்பதை மாநில அரசுதான் முடிவு செய்யும்” என்று தெரிவித்திருந்தார்.
இச்சமயத்தில் தமிழக முதல்வர், அரசு சார்பில் இலவச தடுப்பூசி வழங்கப்படும் என்று திடீரென அறிவித்துள்ளார்.
**-பிரியா**�,”