கடந்த மாதம் ஒரு திரைப்பட இசைவெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட பாக்யராஜ் பொள்ளாச்சி பாலியல் சம்பவம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களைப் பேசியிருந்தார். இது பொதுமக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர் தனது கருத்தால் யாருடைய மனமாவது புண்பட்டிருந்தால் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன் என மன்னிப்பு கேட்டுள்ளார்.
‘கருத்துக்களை பதிவுசெய்’ என்னும் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த மாதம் சென்னையில் நடந்தது. இதில் கலந்துகொண்ட இயக்குநர் கே.பாக்யராஜ், பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் இளைஞர்களிடம் மட்டும் அல்லாமல், பெண்களிடமும் தவறு இருக்கிறது என்றார். மேலும் ஊசி இடம்கொடுக்காமல் நூல் நுழையாது எனக் கூறியவர் பெண்களும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்று கூறினார்.
பாக்யராஜின் இந்த பேச்சு பொதுமக்களிடமும், சமூக ஆர்வலர்களிடமும் எதிர்ப்பை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து பெண்கள் நல ஆர்வலர்கள் அவர்மீது காவல்துறையில் புகார் அளித்தனர்.
இந்நிலையில் இன்று (டிசம்பர்16) செய்தியாளர்களை சந்தித்த அவர் கருத்துக்களைப் பதிவு செய் இசைவெளியீட்டு விழாவில் நான் பேசியது பெண்களை இழிவுபடுத்தும் விதமாக இருந்ததாக மகளிர் அமைப்பிடம் இருந்து புகார்கள் வந்ததாக கூறியிருந்தார்கள். நான் பெண்களுக்கு ஆதரவாகத் தான் படங்கள் எடுத்து இருக்கிறேன், காயப்படுத்தும் விதத்தில் படம் எடுத்ததில்லை. அந்த இசை வெளியீட்டு விழாவில் கூட அவர்களது பாதுகாப்பு கருதி தான் பெண்கள் கவனமாக இருக்க வேண்டும், இந்த காலகட்டத்தில் பெண்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று கூறினேன். எனது வார்த்தைகளைச் சிலர் தவறாக புரிந்துகொண்டனர். ஆண்களுக்குப் பாதிப்பு வருவது வேறு ஆனால் பெண்களுக்கு பாதிப்பு வந்தால் அது நிவர்த்தி பண்ண முடியாத அளவுக்குச் சங்கடமாக இருக்கும். எனவே அவர்கள் கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதற்காகவே அப்படிப் பேசினேன். பெண்கள் கவனக்குறைவாக இருந்ததால் நீங்களும் காரணம் ஆகிவிட்டீர்கள் என்றேன். ஆனால் பெண்கள் மட்டுமே காரணம் என்று கூறியது போல்சொல்லிட்டார்கள். நான் கூறிய கருத்தால் யாருடைய மனமாவது புண்பட்டிருந்தால் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்”, என்றார்.�,”