பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையிலிருந்து சொந்த ஊருக்குச் சென்றவர்கள் தற்போது மீண்டும் திரும்பி வரும் நிலையில் நேற்று இரவு பல்வேறு சுங்கச் சாவடிகளிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
பொங்கல் பண்டிகைக்குச் சென்னையிலிருந்து திருநெல்வேலி ,கன்னியாகுமரி, தூத்துக்குடி ,மதுரை, சேலம் என தென் மாவட்டங்களுக்கு சுமார் 10 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். பொங்கல் விடுமுறை முடிந்து கடந்த இரு தினங்களாகச் சொந்த ஊருக்குச் சென்றவர்கள் மீண்டும் திரும்பிக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் பொங்கல் மற்றும் சனி, ஞாயிறு ஆகிய விடுமுறை நாட்களையும் கழித்துவிட்டு, இன்று திங்கள் கிழமை வேலை நாள் என்பதால் நேற்று இரவு பலர் ஒரே சமயத்தில் சென்னை திரும்பினர். அரசு பேருந்துகள், ஆம்னி பேருந்துகளைத் தவிர்த்து சொந்தக் காரில் சென்றவர்களும் நேற்று இரவு சென்னைக்குப் புறப்பட்டனர். இதனால் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள பல்வேறு சுங்கச் சாவடிகளிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சில இடங்களில் வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலையும் ஏற்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
குறிப்பாகச் சமயபுரம் சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்கு கார்கள் அணிவகுத்து நின்றுள்ளன. பாஸ்டேக் கட்டண முறை அமலுக்கு வந்திருந்த போதும் இதுபோன்று போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் வாணியம்பாடி வாலாஜாபேட்டை ஆகிய சுங்கச் சாவடிகளிலும் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்று உள்ளன.
சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் தேங்கி நின்றது ஒரு பக்கம் என்றால், ஒரேசமயத்தில் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் சென்னை திரும்பியதால் தாம்பரம், பெருங்களத்தூர் கூடுவாஞ்சேரி ஆகிய பகுதிகளிலும் இன்று காலை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. பெருங்களத்தூரிலிருந்து தாம்பரம் வருவதற்கே 30 நிமிடம் வரை நேரமெடுத்தது. சேலத்திலிருந்து சென்னை வரும் வழியில் இருக்கும் ஒவ்வொரு சுங்கச்சாவடிகளிலும் 10 நிமிடங்கள் வரை பேருந்துகள் நின்றன என்று பயணிகள் கூறுகின்றனர்.
சாலைகளில் வாகன நெரிசல் என்றால் நேற்று இரவு சென்னை வந்த ரயில்களிலும் பயணிகள் கூட்டம் அலைமோதியதைக் காண முடிந்தது.�,