சீனா மற்றும் அமெரிக்காவுக்கு இடையில் நிலவி வரும் வர்த்தகப் போரை முடிவுக்குக் கொண்டுவர இரு நாடுகளும் திட்டமிட்டுள்ளன.
உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகளான அமெரிக்காவும், சீனாவும் இருநாட்டு இறக்குமதிகளுக்கும் மாறிமாறி வரி விதித்து வர்த்தகப் போரில் ஈடுபட்டு வந்தன. இதனால் இரு நாட்டு வர்த்தகர்களும், விவசாயிகளும் கடந்த சில மாதங்களாக மிகப்பெரிய அளவில் நெருக்கடிகளை சந்தித்து வந்தனர். இந்த வர்த்தகப் போர் தொடங்கி சுமார் 90 நாட்களை எட்டியுள்ள நிலையில், இந்தப் பிரச்னையில் சுமூகத் தீர்வை எட்ட இருநாடுகளும் முடிவெடுத்துள்ளன.
அர்ஜெண்டினா தலைநகர் பியூனோஸ் அய்ரெஸிலில் ஜி-20 நாடுகளின் மாநாடு நடந்து வருகிறது. இந்த மாநாட்டில் கலந்துகொண்டுள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பும், சீனப் பிரதமர் ஜீ ஜின்பிங்கும் டிசம்பர் 1ஆம் தேதி இரவு விருந்தில் சந்தித்துப் பேசினர். இந்தப் பேச்சுவார்த்தையின் அடிப்படையில் ஜனவரி 1ஆம் தேதி முதல் வரி உயர்வுகளை நிறுத்திக்கொள்வதாக டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இதன்மூலம் 200 பில்லியன் டாலர் மதிப்பிலான சீன இறக்குமதிகளுக்கு வரி உயர்வை அமெரிக்கா நிறுத்தவுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையில் வர்த்தகம் மீண்டும் சுமூக நிலையை எட்டும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து அமெரிக்காவின் வெள்ளை மாளிகை தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘முழுமையான வரிக் குறைப்புக்கு இன்னும் ஒப்புக்கொள்ளப்படவில்லை. இருப்பினும் வேளாண் துறை, ஆற்றல் மற்றும் தொழில் துறை போன்றவற்றுக்கு மிகக் கணிசமான வரிக்குறைப்புக்கு ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. சீனாவுடனான பெரும் வர்த்தகப் பற்றாக்குறையைப் போக்கும் விதமாக மற்ற பொருட்களுக்கும் வரி குறைக்கப்படவுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.�,