�
நடிகை பார்வதியை ட்விட்டரில் மிரட்டிய பிரிண்டோ என்ற 23 வயது வாலிபர், தெற்கு எர்ணாகுளம் போலீசாரால் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
நடிகை பார்வதி கேரள திரைப்பட விழாவில், மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான மம்முட்டி பெண்களை இழிவுபடுத்தும்படி ‘கசாபா’ திரைப்படத்தில் நடித்தது குறித்து விமர்சித்தார். இதற்காக பார்வதி மீது ட்விட்டரில் விமர்சனங்களையும், மிரட்டல்களையும் சிலர் முன்வைத்தது குறித்து போலீசில் [புகார்](https://www.minnambalam.com/k/2017/12/26/1514313347) கொடுத்திருந்தார். இந்தப் புகாரின் மீது நடவடிக்கை எடுக்க கேரள காவல்துறை மற்றும் சைபர் கிரைம் பிரிவு போலீசார் இணைந்து செயல்பட்டனர். அதன் விளைவாக திருச்சூரின் வடக்கஞ்சேரியில் வசிக்கும் 23 வயது வாலிபரான பிரிண்டோ என்ற வாலிபர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
மம்முட்டியின் ரசிகர் மன்றத்தைச் சேர்ந்த பிரிண்டோ, தனக்குப் பிடித்த நாயகனின்மீது முன்வைக்கப்பட்ட விமர்சனங்களை ஏற்றுக்கொள்ள முடியாமல் பல மிரட்டல்களை ட்விட்டரில் வெளியிட்டிருக்கிறார். இவர் மட்டுமில்லாது பெரும்பான்மை மம்முட்டி ரசிகர்கள் இச்செயலில் ஈடுபட்டிருந்தாலும், இதுவரையில் மம்முட்டி தரப்பிலிருந்து எவ்வித பதிலும் வெளியாகவில்லை. பிரிண்டோ மீது தகவல் தொடர்புச் சட்டத்தின் 67ஆவது பிரிவின்படி மின் ஊடகத்தில் ஆபாசமான கருத்துக்களை பதிவு செய்ததற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. பிரிண்டோவைப் போலவே பார்வதிமீது ஆபாசத் தாக்குதல் நடத்திய பலரை விரைவில் கைதுசெய்வோம் என கேரள காவல் துறை தெரிவித்துள்ளது.�,