தென்கொரியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் தங்கம் மற்றும் வெள்ளி ஆகியவற்றுக்கான தடையை இந்தியா நீக்க வேண்டும் என்று அந்நாடு கோரிக்கை விடுத்துள்ளது.
தென்கொரிய நாட்டிலிருந்து இந்தியாவுக்குள் அதிகளவில் தங்கம் மற்றும் வெள்ளி இறக்குமதி செய்யப்பட்டு குவிக்கப்படுவதைக் கட்டுப்படுத்தும் விதமாக 2017ஆம் ஆண்டின் ஆகஸ்ட் மாதத்தில் அங்கிருந்து தங்கம், வெள்ளி இறக்குமதிக்குத் தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது இறக்குமதி மீதான கட்டுப்பாட்டைத் தளர்த்த வேண்டும் என்று தென்கொரியா, இந்திய அரசிடம் கோரிக்கை விடுத்து வருவதாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது. தற்போதுள்ள தடை உத்தரவின்படி அந்நிய வர்த்தகப் பொது இயக்குநரகத்திடம் இறக்குமதியாளர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
நகை மற்றும் ரத்தினங்கள் ஏற்றுமதித் துறை சார்பாக கட்டுப்பாடுகளைத் தளர்த்த வேண்டாம் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அவ்வாறு கட்டுப்பாடுகளைத் தளர்த்தினால் இத்துறையினர் கடுமையாகப் பாதிக்கப்படுவதோடு தென்கொரியாவிலிருந்து அளவுக்கு அதிகமான தங்கம் இந்தியாவுக்குள் இறக்குமதி செய்யப்பட்டு குவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர். தடை விதித்த பிறகு ஓர் இறக்குமதியாளர் கூட அந்நிய வர்த்தகப் பொது இயக்குநரகத்திடம் விண்ணப்பிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக 2010ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்தில் இருநாடுகளும் மேற்கொண்ட இலவச வர்த்தக ஒப்பந்தத்தின்படி தங்கம் இறக்குமதிக்கான கலால் வரி நீக்கப்பட்டிருந்தது. 2017ஆம் ஆண்டின் ஜூலை மாதத்தில் தென்கொரியாவிலிருந்து 338.6 மில்லியன் டாலர் மதிப்பிலான தங்கம் இறக்குமதி செய்யப்பட்டிருந்தது. அதற்கு முன்னர் 2016-17 காலகட்டத்தில் தங்கம் இறக்குமதி மதிப்பு வெறும் 70.46 மில்லியன் டாலர் மட்டுமே.�,