ராஜஸ்தானில் நடைபெற்ற கும்பல் வன்முறை குறித்து பாஜகவுக்கு எதிரான ராகுலின் ட்விட்டுக்கு பாஜக தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது
ஹரியானா மாநிலம் கலோகான் என்னும் கிராமத்தைச் சேர்ந்தவர் ரக்பர் கான்(28). கடந்த 20ஆம் தேதியன்று, ஹரியானா மாநிலத்தில் இருந்து ராஜஸ்தானிலுள்ள மேவாட் மாவட்டத்துக்குத் தன் நண்பர் அஸ்லாமுவை அழைத்துக் கொண்டு இரு பசுக்களுடன் சென்றார் ரக்பர் கான். அல்வார் என்ற இடத்தைக் கடக்கும்போது பசுக்களை கடத்தியதாகக் கூறி இருவரையும் பசு பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்த சிலர் கடுமையாக தாக்கியுள்ளனர். இதனால் ரக்பர் கான் உயிரிழந்துள்ளார்.
அவர் உயிரிழப்பிற்கு முன்பு, போலீசார் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது சில மணி நேரம் காவலில் வைத்து விசாரித்ததாகவும், அதன் பிறகு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் தொலைவில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாகவும், அதனால் ஏற்பட்ட கால தாமதத்தால் ரக்பர் கான் உயிரிழந்தார் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில் ரக்பர் கான் தாக்கப்பட்டு கொல்லப்பட்டதைக் கண்டித்து காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், பாதிக்கப்பட்டவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்கு போலீஸ் அலட்சியம் காட்டியதாக குறிப்பிட்டுள்ள ராகுல், 6கிமீ தொலைவில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல போலீசார் மூன்று மணி நேரம் எடுத்துக் கொண்டது ஏன்? அவர்கள் டீ பிரேக் எடுத்துக் கொண்டார்களா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதான் பிரதமர் மோடியின் மிருகத்தனமான புதிய இந்தியா”. இங்கு மனிதநேயம், வெறுப்பால் அகற்றப்பட்டு, மக்கள் நசுக்கப்பட்டுக் கொல்லப்படுகிறார்கள் என்று தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார் ராகுல் காந்தி.
இதற்குப் பதிலளித்த மத்திய நிதி அமைச்சர் பியூஸ் கோயல், “ஏதாவது குற்றம் நடக்கும்போது கொண்டாட்டத்தில் துள்ள வேண்டாம் ” என்று குறிப்பிட்டுள்ளார். “இந்த வன்முறைக்கு எதிராக மாநில அரசு கடுமையான நடவடிக்கையை எடுத்துள்ளது. நீங்கள் தேர்தல் ஆதாயங்களுக்காக ஒவ்வொரு முறையும் சமுதாயத்தைப் பிரிக்க முயல்கிறீர்கள் பின்னர் முதலைக் கண்ணீர் வடிக்கிறீர்கள். போதும் நிறுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் வெறுப்பைப் பரப்புபவர்” என்றும் பதிவிட்டுள்ளார்.
“ராகுல் காந்தியின் குடும்பம் 1984 ஆண்டில் பகல்பூர், நெல்லி போன்ற பல வெறுப்பான சம்பவங்களுக்கு தலைமை தாங்கியது. தேர்தல் ஆதாயத்துக்காகச் சமூக நல்லிணக்கத்தை அவர் சிதைக்க பார்க்கிறார்” என்று மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி பதிவிட்டுள்ளார்.�,”