mரியல் எஸ்டேட்டில் ஊழல் : நீதிபதி கண்டனம்!

Published On:

| By Balaji

ரியல் எஸ்டேட் துறையில் அனைத்து நடவடிக்கைகளிலும் நடக்கிற ஊழலைத் தடுக்க அதிகாரிகள் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை என சென்னை உயர் நீதிமன்றம் கண்டித்துள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூரில், பழைய மாமல்லபுரம் சாலையில் 100 ஏக்கர் நிலத்தில் தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனம், வீடுகளைக் கட்டி விற்பனை செய்தது. இந்த வீடுகளுக்கு செல்ல சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கவில்லை எனக் குற்றம்சாட்டி, குடியிருப்பு உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில், தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

திருப்போரூர் பஞ்சாயத்து செயல் அதிகாரி, 2014ம் ஆண்டே பணி முடிப்பு சான்று வழங்கி விட்டதாக ரியல் எஸ்டேட் நிறுவனம் கூறியதை ஏற்று அந்த புகாரை விசாரிக்க ஒழுங்குமுறை ஆணையம் மறுத்துவிட்டது.

இதைத்தொடர்ந்து, தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த ஒழுங்குமுறை மேல்முறையீட்டு தீர்ப்பாயம் மூன்று மாதங்களில் இதை விசாரித்து முடிவு எடுக்க உத்தரவிட்டது.

இந்த தீர்ப்பை எதிர்த்து ரியல் எஸ்டேட் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், ரியல் எஸ்டேட் துறையில் அனைத்து நடவடிக்கைகளிலும் ஊழல் தலைவிரித்தாடுகிறது. அதை கட்டுப்படுத்த அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. பணி முடிப்பு சான்றிதழ்கள் முறையான ஆய்வுக்கு பின் வழங்கப்படுவதில்லை. அவை வாங்கப்படுகிறது.

ஆய்வு மேற்கொள்ளாமல் பணி முடிப்பு சான்றுகளை வழங்கும் அதிகாரிகளுக்கு எதிராக தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கண்டனம் தெரிவித்த நீதிபதி தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும், குடியிருப்பு உரிமையாளர்கள் சங்கத்தினர் அளித்த புகாரை ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் விசாரித்து மூன்று மாதங்களில் தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

**-வினிதா**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share