%
டெல்லி ஷாகின்பாக் போராட்டப் பகுதி அருகே பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ), என்.ஆர்.சி, என்.பி.ஆர் ஆகியவற்றுக்கு எதிராக டெல்லி ஷாகின்பாக் பகுதியில் மூன்று மாதங்களுக்கும் மேலாக இரவு-பகல் போராட்டம் தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக இன்று ஒருநாள் சுய ஊரடங்கை கடைபிடிக்குமாறு பிரதமர் வேண்டுகோள் விடுத்தார். எனினும் சிஏஏவுக்கு எதிரான தங்களது போராட்டம் தொடரும் என்று ஷாகின்பாக் போராட்டக்காரர்கள் திட்டவட்டமாகத் தெரிவித்தனர்.
டெல்லி ஷாகின்பாக் பகுதியில் இன்று (மார்ச் 22) போராட்டம் தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில் போராட்டம் நடந்துவரும் இடத்தின் அருகே மர்மப் பொருள் ஒன்று வெடித்துச் சிதறியது. தீப்பிடித்த பகுதி சிறிது நேரத்தில் போராட்டக்காரர்களால் அணைக்கப்பட்டது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாக போராட்டக்காரர்கள் குற்றம்சாட்டினர்.
இதுதொடர்பாக காவல் துறையினர் கூறுகையில், “இன்று காலை 9.30 மணிக்கு மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் பெட்ரோல் குண்டை வீசிச் சென்றனர். இதனால் யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை” என்று விவரித்தனர். அப்பகுதியில் பெட்ரோல் நிரப்பப்பட்ட 6 பாட்டில்களையும் காவல் துறையினர் கண்டுபிடித்தனர். பெட்ரோல் குண்டு வீசிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
**எழில்**
�,