கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா பெருந்தொற்று காரணமாக, காஷ்மீரில் புகழ்பெற்ற அமர்நாத் யாத்திரை நடைபெறாமல் இருந்தது. இந்நிலையில் தற்போது கொரொனா கட்டுக்குள் வந்துள்ள நிலையில் இந்த ஆண்டு அமர்நாத் யாத்திரை நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. மேலும் இரண்டு ஆண்டுகள் நடத்தப்படாததால் இந்த ஆண்டு பக்தர்கள் கூட்டம் அதிகமாக வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
அமர்நாத் யாத்திரைக்கு தேவையான ஏற்பாடு நடவடிக்கைகளை காஷ்மீர் அரசு துரிதமாக செய்து முடித்தது. இந்த யாத்திரைக்கு வரும் பக்தர்கள் தங்குவதற்கு வசதியாக 1500க்கும் மேற்பட்ட கூடாரங்கள் அமைக்கப்பட்டன. ஒரு கூடாரத்தில் பத்து பேர் வரை தங்க முடியும்.
நேற்று அமர்நாத் குகைக் கோவிலுக்கு செல்லும் முதல் குழுவின் பயணத்தையும், பகவதி நகர் முகாமில் இருந்து புறப்பட்ட 4 ஆயிரத்து 890 பக்தர்களின் 176 வாகனங்களையும் காஷ்மீர் துணை கவர்னர் மனோஜ் சின்ஹா கொடியசைத்து தொடங்கி வைத்தார். இன்று பகல்காம் மற்றும் பதால் அடிவார முகாம்களை அடைந்த பக்தர்கள் 43 நாட்களான இந்த அமர்நாத் யாத்திரையை இன்று தொடங்கினார்கள்.
இந்த வருடம் அமர்நாத் யாத்திரைக்கு சுமார் மூன்று லட்சம் பக்தர்கள் பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த யாத்திரை காரணமாக ஜம்மு காஷ்மீரில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதுகுறித்து பேசிய காஷ்மீர் துணைநிலை கவர்னர் மனோஜ் சின்ஹா, “இரண்டு வருடங்கள் கழித்து நடைபெறும் அமர்நாத் யாத்திரை நேற்று கொடியசைத்து தொடங்கி வைக்கப்பட்டது. மேலும் பக்தர்கள் இன்று 43 நாட்களான இந்த யாத்திரையை தொடங்கினார்கள். இந்த வருட அமர்நாத் யாத்திரையையொட்டி ஜம்மு காஷ்மீர் பகுதிகளில் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த வருடம் சுமார் மூன்று லட்சம் பக்தர்கள் இந்த யாத்திரைக்காக பதிவு செய்துள்ளனர்.” என்று தெரிவித்தார்.
.