பாகிஸ்தானில் அவசர நிலையை அமல்படுத்த ஆலோசனை!

public

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வழக்குகள் வேகமாக அதிகரித்து வரும் நிலையில் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் அவசரநிலையை அமல் படுத்த பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது. பஞ்சாபில் தினமும் நான்கு முதல் ஐந்து கற்பழிப்பு வழக்குகள் பதிவாகி வருகின்றன. இதன் காரணமாக பாலியல் துன்புறுத்தல், துஷ்பிரயோகம் மற்றும் வற்புறுத்தல் போன்ற வழக்குகளை கையாள்வதற்கான சிறப்பு நடவடிக்கைகளை பாகிஸ்தான் அரசாங்கம் பரிசீலித்து வருகிறது.

இதுமட்டுமின்றி, பாகிஸ்தானில் பணியிடங்களில் பெண்களுக்கு ஏற்படும் துன்புறுத்தல்கள், பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை மற்றும் பெண்களுக்கு எதிரான பிற பாரபட்சமான செயல்களும் அதிகளவில் நடந்து வருகின்றன. கடந்த 2018ஆம் ஆண்டில் நாட்டில் பெண்களுக்கு பணியிட துன்புறுத்தல் மற்றும் பெண்களுக்கு எதிரான 5,048 வழக்குகள் பதிவாகியுள்ளன, அதைத் தொடர்ந்து 2019ஆம் ஆண்டு 4,751 வழக்குகளும் , 2020ஆம் ஆண்டில் 4,276 வழக்குகளும் மற்றும் 2021ஆம் ஆண்டில் 2,078 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று மனித உரிமைகள் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து உரிமை ஆர்வலர் நயாப் கோஹர் ஜான் கூறுகையில், “ஒரு பெண்ணுக்கு எதிராக ஒரு குற்றம் நடந்த தருணத்தில் இருந்து அதை காவல் துறையில் பதிவு செய்வது வரையிலான முழு செயல்முறையும், நீதிமன்ற நடைமுறையும் குற்றவாளிகள் தப்பிக்கும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளது.” என்று கூறினார்.

இதுகுறித்து பேசிய பாகிஸ்தானின் பஞ்சாப் உள்துறை அமைச்சர் அட்டா தரார், “இதுபோன்ற சம்பவங்கள் அதிகரிப்பது, சமூகம் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு கடுமையான பிரச்சினையை தருகிறது. கற்பழிப்பு வழக்குகளை சமாளிக்க, பாகிஸ்தான் அரசு அவசர நிலையை அமல்படுத்த உள்ளது. இது தொடர்பாக சிவில் சமூகம், பெண்கள் உரிமை அமைப்புகள், ஆசிரியர்கள், வழக்கறிஞர்கள் ஆகியோரிடம் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.” என்று தெரிவித்தார்.

.

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *