கடந்த இரண்டு ஆண்டுகளாக நம்மை வாட்டி வந்த கொரோனா பெருந்தொற்று சற்று கட்டுப்பாட்டுக்குள் வந்த நிலையில், உலகில் பல நாடுகளில் மீண்டும் கொரோனா பரவல் வேகம் எடுத்து வருகிறது. இந்நிலையில் அமெரிக்க நாட்டில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. தற்போது அமெரிக்காவில் 6 மாதம் முதல் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்த அந்நாட்டு அரசு அனுமதி அளித்துள்ளது.
தற்போது அமெரிக்காவில் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளில் 1.8 கோடி பேர் கொரோனா தடுப்பூசி செலுத்த தகுதியானவர்கள். அங்கு 5 முதல் 18 வயது உடையவர்களுக்கு பைஸர் தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தது. தற்பொழுது மீண்டும் அமெரிக்காவில் தொற்று அதிகரித்துள்ளதால் தடுப்பூசி போடும் பணியை அந்த நாடு தீவிரப்படுத்தி உள்ளது.
இந்நிலையில் மாடர்னா மற்றும் பைஸர் நிறுவனம் தயாரிக்கும் தடுப்பூசியை, ஆறு மாதம் முதல் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு செலுத்த அமெரிக்க அரசு அனுமதி அளித்துள்ளது. மேலும் பைஸரருடன் இணைந்து மாடர்னா நிறுவனத்தின் தடுப்பூசி 5 முதல் 18 வயது உடையவர்களுக்கு செலுத்தவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த தடுப்பூசி செலுத்தும் பணி வருகிற திங்கட்கிழமை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தடுப்பூசி செலுத்தும் பணியை முதல் சில மாதங்களுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தலைமையில் அமைக்கப்பட்ட ஒரு குழு நேரடியாக கண்காணிக்கும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அறிவிப்பு வெளியான உடனே அமெரிக்காவில் இருந்து பல பகுதிகளில் உள்ள சுகாதார மையங்கள், மருத்துவமனைகள் மற்றும் மருந்து விநியோக கடைகள் இந்த தடுப்பூசிகளுக்கு ஆர்டர் கொடுத்து விட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
.