இலங்கையில் நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடியை போலவே பாகிஸ்தானிலும் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருப்பதால் அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்யவும் போதிய நிதியின்றி தவித்து வருகிறது. பாகிஸ்தானில் தற்பொழுது உணவு, மருந்துகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை விண்ணைத் தொடும் அளவுக்கு உயர்ந்துள்ளது.
உலக அளவில் தேயிலை இறக்குமதி செய்வதில் பாகிஸ்தான் நாடு முதலிடத்தில் உள்ளது. 20 கோடி மக்கள் தொகை கொண்ட பாகிஸ்தானில் டீ அருந்துபவர்களின் எண்ணிக்கை மிக அதிகம். பாகிஸ்தானில் பெரும்பாலானோருக்கு டீ குடிக்கும் பழக்கம் உள்ளது. மேலும் 2020ஆம் ஆண்டு பாகிஸ்தான் 640 மில்லியன் டாலர் மதிப்பில் தேயிலையை இறக்குமதி செய்தது. இந்நிலையில் பொருளாதார நெருக்கடியில் சிக்கி வரும் பாகிஸ்தானுக்கு தேயிலையை இறக்குமதி செய்வது ஒரு பெரிய சுமையாக உள்ளது.
ஆகையால் பாகிஸ்தான் பொதுமக்கள் டீ குடிப்பதை குறைத்துக் கொள்ள வேண்டும் என்று பாகிஸ்தான் அரசு கோரிக்கை விடுத்துள்ளது. மேலும் பாகிஸ்தான் தற்போது உள்ள சூழலில் தேயிலை இறக்குமதி அரசாங்கத்திற்கு பெரும் சுமையாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பாகிஸ்தான் திட்டம் மற்றும் மேம்பாட்டுத்துறை அமைச்சர் அஷன் இக்பால் கூறுகையில், “பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடி நிலை என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயமே. ஆகையால் நாம் எல்லாவற்றிலும் சிக்கனத்தை செயல்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும். மின்சாரத்தை மிச்சப்படுத்த வணிக நிறுவனங்கள் தங்களது வேலையை சீக்கிரம் முடித்துக் கொள்ள வேண்டும். மேலும் தற்பொழுது கடனை பெற்று தேயிலை இறக்குமதி நடந்து வருவதால், பாகிஸ்தான் மக்கள் ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு முறை மட்டுமே தேநீர் அருந்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.” என்று கூறினார்.
.