டெல்லியில் நேற்று (மே 25) 150 அதிநவீன மின்சாரப் பேருந்துகளை அம்மாநில முதலமைச்சர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த நிலையில் இந்திர பிரஸ்தா டிப்போவில் இருந்து புறப்பட்ட சில மணி நேரங்களுக்குப் பிறகு, குறிப்பிட்ட வரம்பை மீறி வாகனத்தின் வெப்பநிலை அதிகரித்ததால் பேருந்து ஒன்று பழுதடைந்தது.
இதுகுறித்து டெல்லி போக்குவரத்து அதிகாரிகள் கூறுகையில், “உள்ளமைக்கப்பட்ட பாதுகாப்பு செயல்பாடு காரணமாகப் பேருந்து நிறுத்தப்பட்டது. அதை சரிசெய்த பிறகு, இரண்டு மணி நேரம் கழித்து சாலைக்குத் திரும்பியது.
பேருந்துகளின் தொடக்க விழாவின்போது, “அடுத்த ஆண்டுக்குள் இதுபோன்று 2,000 பேருந்துகள் தலைநகர் டெல்லியில் அறிமுகப்படுத்தப்படும்” என்று டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் அறிவித்தார். மேலும், அடுத்த 10 ஆண்டுகளில் மின்சாரப் பேருந்துகளை வாங்குவதற்கு 1,862 கோடி ரூபாய் செலவழிக்க டெல்லி அரசு திட்டமிட்டுள்ளதாக முதல்வர் கூறினார்.
போக்குவரத்து அமைச்சர் கைலாஷ் கெஹ்லோட், தலைமைச் செயலாளர் நரேஷ் குமார் மற்றும் பிற மூத்த அதிகாரிகளுடன் கெஜ்ரிவால் நேற்று காலை பேருந்து ஒன்றில் பயணம் செய்தார். சிசிடிவி கேமராக்கள், பேனிக் பட்டன் மற்றும் ஜிபிஎஸ் உள்ளிட்ட அதிநவீன அம்சங்களுடன் கூடிய 150 மின்சாரப் பேருந்துகளை டெல்லி தற்போது வாங்கியுள்ளது. 11 ஆண்டுகளுக்குப் பிறகு, பொதுப் போக்குவரத்துக் கழகம் இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலும், செலவிலும் பேருந்துகளை வாங்கியது குறிப்பிடத்தக்கது.
பேருந்து பழுதடைந்தது குறித்து டிடிசி தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில். “எலெக்ட்ரிக் பஸ் எண் 2610 வடிவமைக்கப்பட்ட வரம்புக்கு அப்பால் வெப்பநிலை அதிகரித்ததற்கான அறிகுறியைக் காட்டியது. எனவே, அதன் உள்ளமைக்கப்பட்ட பாதுகாப்பு அம்சம் காரணமாக வாகனம் தானாகவே நிறுத்தப்பட்டது. இரண்டு மணி நேரத்தில் சரிபார்க்கப்பட்டு மீண்டும் சாலையில் இயக்கப்பட்டது” என்று தெரிவித்துள்ளது.
.