சிட்னியின் லோவி நிறுவனம், ஆசியாவின் சக்தி வாய்ந்த நாடுகளின் 2021 ஆண்டின் பட்டியலை வெளியிட்டுள்ளது. உலகின் முக்கிய நாடுகளின் பொருளாதார திறன், இராணுவத் திறன், உள்நாட்டு நிலைமை, எதிர்கால திட்டமிடல், பிற நாடுகளுடனான பொருளாதார உறவுகள், பாதுகாப்பு வலையமைப்பு, அரசியல் மற்றும் இராஜதந்திர செல்வாக்கு மற்றும் கலாச்சார செல்வாக்கு ஆகியவற்றை ஆய்வு செய்து ஆஸ்திரேலியாவின் லோவி நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் இந்தப் பட்டியலை வெளியிடுகிறது.
இந்த பட்டியலில் அமெரிக்கா, சீனா மற்றும் ஜப்பானுக்கு அடுத்தபடியாக இந்தியா 4ஆவது இடத்தில் உள்ளது. 2020ஆம் ஆண்டை விட இந்த ஆண்டு இந்தியா 2 புள்ளிகள் இழப்பை சந்தித்துள்ளது. இந்தியா அதன் எதிர்மறையான சக்தி இடைவெளி மதிப்பெண் காரணமாக இந்த துறையில் முன்பை விட குறைவான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இருந்தபோதிலும், எதிர்கால வளங்களின் அளவீட்டில் இந்தியா சிறப்பாக செயல்பட்டுள்ளது.
கொரோனாவால் இந்தியாவின் பொருளாதாரம் சீர்குலைந்துள்ளது. ஆசியாவின் இரண்டாவது அதிக மக்கள்தொகை கொண்ட நாடு இப்போது நடுத்தர சக்தி பட்டியலுக்கு மாறியுள்ளதாக அறிக்கை கூறுகிறது. இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் உள்ள அனைத்து நாடுகளைவிட கொரோனா வைரசால் இந்தியா வளர்ச்சிக்கான திறனை அதிகம் இழந்துள்ளதாக அறிக்கை கூறியுள்ளது.
இந்தப் பட்டியலில் பாகிஸ்தான் 14.7 புள்ளிகளுடன் 15ஆவது இடத்திலும், வங்காளதேசம் 9.4 புள்ளிகளுடன் 19ஆவது இடத்திலும் உள்ளன. 20வது இடத்தில் இருக்கும் இலங்கை, 8.6 என்ற புள்ளியை பெற்றுள்ளது. மியான்மர் 7.4 புள்ளிகளுடன் 21ஆவது இடத்திலும், நேபாளம் 4.5 புள்ளிகளுடன் 25ஆவது இடத்திலும் உள்ளன.
.