சிவசங்கர் பாபா: ஜாமீன் வழங்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!

public

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் சிவசங்கர் பாபாவுக்கு ஜாமீன் வழங்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் அடுத்த புதுப்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா தனது பள்ளியில் படித்த மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கடந்த ஜூன் 16ஆம் தேதி கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வரும் நிலையில், இவர் மீது இதுவரை மொத்தம் 4 போக்சோ வழக்குகள், 2 பெண் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகளில் ஏற்கனவே, கீழமை நீதிமன்றம் முதல் சென்னை உயர் நீதிமன்றம் வரை சிவசங்கர் தரப்பில் மூன்று முறை ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. பாதிக்கப்பட்ட மாணவிகள் தரப்பு மற்றும் இந்த வழக்கை விசாரித்து வரும் சிபிசிஐடி போலீசார் சிவசங்கர் பாபாவுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தனர். இதை ஏற்ற சென்னை உயர் நீதிமன்றமும், அவருக்கு ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்தது.

இந்த நிலையில், இந்த உத்தரவை எதிர்த்தும், தனக்கு ஜாமீன் வழங்கக் கோரியும் சிவசங்கர் பாபா தரப்பில், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கு இன்று(மார்ச் 8) நீதிபதி எல்.நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது சிவசங்கர் பாபா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “சிவசங்கர் பாபா கைது செய்யப்பட்டு, பல நாட்களாக சிறையில் இருக்கிறார். அவருக்கு ஜாமீன் வழங்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. அவருக்கு ஏற்கனவே இருதய நோய் மற்றும் முடக்குவாதம் இருப்பதால், சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டிய நிலை உள்ளது. அதனால், உடனடியாக அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும்” என்று வாதாடினார்.

இதையடுத்து ஆஜரான தமிழக காவல்துறை தரப்பு வழக்கறிஞர், “பாலியல் தொல்லை வழக்கில் சிவசங்கர் பாபா குற்றவாளி என்பதற்கான அனைத்து ஆதாரங்களும் உள்ளது. அவருக்கு ஜாமீன் வழங்கினால் சாட்சிகளை அழிக்க வாய்ப்பு உள்ளது என்பதால், அவருக்கு ஜாமீன் வழங்க கூடாது” என்று எதிர்ப்பு தெரிவித்தார்.

இரு தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், சிவசங்கர் பாபாவுக்கு ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்தனர்.

இருப்பினும், சிவசங்கர் பாபாவுக்கு ஜாமீன் வழங்கலாமா? என்பது குறித்து தமிழக காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள் இந்த வழக்கை இரண்டு வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.
**-வினிதா**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *