`கழன்று ஓடிய சக்கரம்: பயணிகளின் நிலை?

public

திருப்பூரில் சாலையில் சென்று கொண்டிருந்த போது அரசுப் பேருந்தின் சக்கரம் கழன்று ஓடியதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

திருநெல்வேலியிலிருந்து தமிழக போக்குவரத்துக் கழகத்துக்குச் சொந்தமான அரசு பேருந்து ஒன்று கோயம்புத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் 47 பயணிகள் பயணித்தனர். பேருந்தை காமராஜ் என்பவர் ஓட்டினார்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சென்று கொண்டிருந்தபோது பேருந்தின் இடதுபுற முன்பக்க சக்கரம் கழன்று ஓடியது.
அப்போது, பேருந்து ஒரு பக்கமாக சாய்ந்ததை உணர்ந்த ஓட்டுநர் சக்கரம் கழன்று ஓடுவதையும் பார்த்துக் கொண்டார்.

பின்னர் பேருந்தை சாதுரியமாகச் சிறிது தூரம் நகர்த்திக் கொண்டு சென்ற ஓட்டுநர் காமராஜ் சாலையோரம் நின்று கொண்டிருந்த ஒரு இருசக்கர வாகனத்தின் மீது மோதி பேருந்தை நிறுத்தினார் . ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் விபத்து தவிர்க்கப்பட்டது.

இதனால் பேருந்தில் பயணித்து வந்த 47 பயணிகளும் உயிர் தப்பினர். இருந்தபோதிலும், சக்கரம் கழன்று ஓடிய பிறகு பேருந்து நிறுத்தப்படும் வரை உயிரைக் கையில் பிடித்து வந்ததாகப் பயணிகள் தெரிவித்தனர். இதுபோன்ற விபத்துகள் இனி நடக்காத வகையில் அரசு பேருந்துகளைப் பராமரிக்க வேண்டும் என்றும் அவர்கள் கூறினர்.

பாதி வழியில் இறக்கிவிடப்பட்ட பயணிகள் பின்னர் மாற்று பேருந்தில் கோவை அழைத்துச் செல்லப்பட்டனர்.

இந்த சூழலில் பேருந்து ஓரம் கட்டி நிறுத்திவைக்கப்பட்டிருந்ததை வீடியோ எடுத்த சிலர், இதுதான் அரசு பேருந்துகளின் நிலையா? என்று சமூக வலைதளங்களில் முதல்வர் ஸ்டாலினையும், போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பனையும் டேக் செய்து கேள்வி எழுப்பியுள்ளனர்.

**-பிரியா**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *