சென்னை மாங்காட்டில் பிளஸ் 1 மாணவி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் கல்லூரி மாணவர் விக்னேஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாலியல் தொல்லையால் மாணவிகள் தற்கொலை செய்துக் கொள்வது ஒருபக்கம் அதிகரித்து வருகிற நிலையில், பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டு பெண் குழந்தைகள் கொலை செய்யப்படுவதும் அதிகரித்து வருவது வேதனை அளிக்கிறது.
கோவை மற்றும் கரூரில் இரண்டு மாணவிகள் ஆசிரியர்களின் பாலியல் தொல்லையால் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், கடந்த சனிக்கிழமையன்று சென்னை மாங்காட்டைச் சேர்ந்த பிளஸ் 1 மாணவி தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பெற்றோர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியது.
முன்னதாக கடந்த 11ஆம் தேதி காணாமல் போன கோவை சரவணம் பட்டியை சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவி முகம் எரித்து சிதைக்கப்பட்ட நிலையில் சாக்கு மூட்டையில் பிணமாக மீட்கப்பட்டார். இதில் மாணவி பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது விசாரணையில் தெரியவந்தது.
கடந்த 15ஆம் தேதி, திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலை அடிவாரப் பகுதியில் உள்ள பாச்சலூர் கிராமத்தில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்த மாணவி அவர் படித்து வந்த நடுநிலைப் பள்ளியின் அருகே எரிக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டார். இதில் எதற்காக மாணவி கொல்லப்பட்டார் என்றும் தெரியவில்லை, இதுவரை குற்றவாளியும் பிடிக்கப்படவில்லை.
இப்படி தமிழ்நாட்டில் தினந்தோறும் பெண் குழந்தைகளுக்கு எதிராக சம்பவம் நடந்து கொண்டிருப்பது வேதனை அளிக்கிறது. 20 நாட்களில் மூன்று மாணவிகள் உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதை உரக்கச் சொல்கிறது.
இந்நிலையில் மாங்காட்டில் மாணவி ஒருவர் தற்கொலை செய்துக் கொண்ட வழக்கில் கல்லூரி மாணவர் விக்னேஷ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்தில் தற்கொலை செய்துக் கொள்வதற்கு முன்னதாக மாணவி மூன்று கடிதங்கள் எழுதியுள்ளார். இரண்டு கடிதங்களில் ஆசிரியர்கள், உறவினர்கள் யாரையும் நம்பக்கூடாது. இந்த உலகத்தில் பாதுகாப்பானது, கல்லறையும், தாயின் கருவறையும்தான். பள்ளியில் கூட பாதுகாப்பு இல்லை” என எழுதியிருந்தார்.
மற்றொரு கடிதத்தை மாணவி எழுதி விட்டு, பின்னர் அதை கிழித்து போட்டுள்ளார். அதில், முன்னாள் ஆசிரியை ஒருவரின் மகன் பாலியல் தொல்லை கொடுத்ததால் தான் தற்கொலை செய்து கொள்வதாக குறிப்பிட்ட மாணவி, அவரது பெயரை குறிப்பிடாமல் எழுதி இருந்ததாக விசாரணை மேற்கொண்ட போலீசார்தெரிவித்தனர்.
அதனுடன் மாணவியின் செல்போனை ஆய்வு செய்த போலீசார், அந்தப் பள்ளியில் படித்த 20 பேரிடம் விசாரணை மேற்கொண்டனர். அதில் விக்னேஷ் என்ற மாணவர் மாணவிக்கு அடிக்கடி ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பி தொல்லை கொடுத்தது தெரிய வந்தது. இதையடுத்து, மாணவர் விக்னேஷ் மீது போக்சோ, பாலியல் வன்கொடுமை, தற்கொலைக்கு தூண்டுதல் ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் இன்று அவரை கைது செய்தனர். மாணவரை சிறையில் அடைக்கவுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
**-வினிதா**
�,