பிரதமர் மோடியின் ஆட்சிக் காலத்தில் 2018ஆம் ஆண்டு மட்டும் ஒரு கோடிப் பேர் வேலை இழந்துள்ளதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி புதிய தகவலை வெளியிட்டுள்ளார்.
மக்களவைத் தேர்தலை ஒட்டி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நாடு முழுதும் தீவிரப் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். இந்த வகையில் இன்று (மார்ச் 20) திரிபுரா மாநிலத்தில் பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டார் ராகுல்.
அகர்தலா நகரில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் குமுல்விங் பகுதியில் பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி,
“மோடி ஆட்சியின் தவறான பொருளாதாரக் கொள்கைகளால் கடந்த 2018 ஆம் ஆண்டில் மட்டும் சுமார் ஒரு கோடி இந்தியர்கள் தாங்கள் பார்த்து வந்த வேலைகளை இழந்துள்ளனர். இப்போதைய நிலவரப்படி ஒவ்வொரு நாளும் இந்தியாவில் மூவாயிரம் பேரின் வேலை பறிபோய்க் கொண்டிருக்கிறது. திரிபுரா மாநிலத்தில் மட்டும் இப்போது ஏழரை லட்சம் பேர் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். மோடி அவர்களுக்காக எதுவும் செய்யவில்லை” என்றார் ராகுல்.
முன்னதாக மணிப்பூரில் பேசிய ராகுல் காந்தி, “நாட்டின் ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒவ்வொரு தனித்தன்மை உண்டு. காங்கிரஸ் கட்சி அந்தந்த மாநிலங்களின் தனித்துவத்தை,கலாசாரத்தை, மொழியை, வரலாற்றை மதிக்கும் கட்சி. காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் வட கிழக்கு இந்தியாவை உற்பத்தி மையமாகவும், வேலைவாய்ப்புக்கான மையமாகவும் ஆக்கும்” என்று கூறினார் ராகுல்.�,