தாய்நாட்டை விட்டு வெளிநாடுகளுக்குப் புலம்பெயர்ந்தவர்களில் அதிகமானோர் இந்தியர்கள் என்று ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
கல்வி, வேலை, பணியிட மாற்றம் எனச் சொந்த நாட்டை விட்டு வெளிநாடுகளுக்குச் செல்கின்றனர். அவ்வாறு செல்பவர்களில் பலர் தாங்கள் செல்லும் நாடுகளிலேயே நிரந்தரமாகத் தங்கிவிடுகின்றனர். இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு இதுகுறித்து ஆய்வு நடத்தி தனது ‘உலகளாவிய இடம்பெயர்வு அறிக்கை 2020’ஐ வெளியிட்டுள்ளது. சர்வதேச புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை இப்போது 270 மில்லியனாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் உலகெங்கிலும் 17.5 மில்லியன் இந்தியர்கள் பரவி வாழ்ந்து வருகின்றனர். அந்த வகையில் வெளிநாடுகளுக்குப் புலம்பெயர்ந்தவர்களின் பட்டியலில் இந்தியர்கள் முதலிடத்தில் இருக்கின்றனர்.
11.8 மில்லியனுடன் மெக்ஸிகோ இரண்டாவது இடத்திலும், 10.7 மில்லியனுடன் சீனா மூன்றாவது இடத்திலும் உள்ளது. உலகம் முழுவதிலும் இருந்து அமெரிக்காவுக்கு மட்டும் 51 மில்லியன் பேர் இடம் பெயர்ந்திருக்கின்றனர். இந்தியாவிலிருந்து சென்றவர்களும், அதிகளவு பேர் அமெரிக்காவில் இருப்பதாக இந்த ஆய்வு தெரிவிக்கிறது.
இதில் அதிகமானோர், அதாவது மூன்றில் இருவர் வேலைக்காகச் சென்றவர்கள். அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் அங்கிருந்து கடந்த ஆண்டு மட்டும் இந்தியாவுக்கு சுமார் 78.6 மில்லியன் டாலர்கள் அனுப்பியுள்ளனர், இந்தியாவைத் தொடர்ந்து சீனர்கள் சீனாவுக்கு 67.4 மில்லியன் டாலர்கள் அனுப்பியுள்ளனர். அமெரிக்காவிலிருந்து உலகம் முழுவதும் 689 மில்லியன் டாலர்கள் அனுப்பப்பட்டுள்ளது.
உள்நாட்டிலேயே இடம்பெயர்ந்தவர்களில் 6.1 மில்லியனுடன் சிரியா முதலிடத்தில் இருக்கிறது. சிரியாவைத் தொடர்ந்து கொலம்பியா (5.8 மில்லியன்) மற்றும் காங்கோ (3.1 மில்லியன்) ஆகிய நாடுகள் உள்ளன.�,