�
அண்மையில், உத்தரப்பிரதேசம் மாநிலம், மதுரா நகரில் அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்திருந்தவர்களை அகற்ற முயன்றபோது போலீஸாருக்கும் ஆக்கிரமிப்பாளர்களுக்கும் இடையேயான மோதல், கலவரமாக மாறியது. இதில், மதுரா மாவட்ட போலீஸ் எஸ்.பி மற்றும் ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்பட 29 பேர் உயிரிழந்தனர். இக்கலவரம் குறித்து விசாரிக்க உத்தரப்பிரதேச மாநில அரசு ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள மாவூ என்ற இடத்தில், மத்தியில் பாஜக தலைமையிலான ஆட்சி, இரண்டு ஆண்டுகள் நிறைவு பெறுவதையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், “ஆயிரக்கணக்கான மக்கள் மதுராவில் நிலத்தை ஆக்கிரமித்துள்ளனர். ஆனால், மாநில அரசு இதுபற்றி அறியாமல் இருந்திருக்கிறது. மாநில அரசு சிபிஐ விசாரணை கோரினால், அதற்கு மத்திய அரசு தயாராக உள்ளது” என்று தெரிவித்துள்ளார். முன்னதாக இந்த வார தொடக்கத்தில் மதுரா வன்முறை குறித்து சிபிஐ விசாரணைக்கு மாநில அரசு பரிந்துரைக்குமா? என்று ராஜ்நாத் சிங் சவால் விடுத்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.�,