தேர்தல் காலத்தில் விவசாயிகளின் ஆதரவைப் பெற மாநில அரசுகள் மேற்கொள்ளும் வேளாண் ஆதரவு நடவடிக்கைகளால் மாநிலங்களின் நிதிப் பற்றாக்குறை கடுமையாக உயருமென்று இந்திய மதிப்பீடு மற்றும் ஆராய்ச்சி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து இந்த அறிக்கையில், ‘தேர்தல் காலத்தில் மாநில அரசுகள் விவசாயிகளிடம் நம்பிக்கை பெறுவதற்காக கடன் தள்ளுபடி மற்றும் நிதியுதவி உள்ளிட்ட சில சலுகைகளை அளிக்கின்றன. தேர்தலில் வெற்றிபெற விவசாயிகளின் நம்பிக்கையைப் பெறும் விதமாக மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கைகளால் மாநிலங்களின் நிதிப் பற்றாக்குறை கடுமையாக அதிகரிக்கிறது. இதன்படி 2019-20ஆம் நிதியாண்டில் மாநிலங்கள் முந்தைய ஆண்டைக் காட்டிலும் 3.2 விழுக்காடு கூடுதல் நிதிப் பற்றாக்குறையை எதிர்கொள்ளும்.
இதனால் 2019-20ஆம் நிதியாண்டில் மாநிலங்களின் கடன் சுமை அதிகரிக்கும். இந்த வேளாண் கடன் தள்ளுபடிகள் உள்ளிட்ட சலுகைகள் யாவும் மே மாதத்தில் நடக்கவுள்ள மக்களவைத் தேர்தலையொட்டியே எடுக்கப்படுகிறது. குறிப்பாக மத்தியப் பிரதேசம், கேரளம் மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட சில மாநிலங்களில் நிதிப் பற்றாக்குறை அதிகரிக்கும்’ என்று கூறப்பட்டுள்ளது.
டிசம்பர் மாதத்தில் மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், அசாம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் வேளாண் கடன் தள்ளுபடி அறிவிப்பு வெளியானது. ஒடிசா மற்றும் ஜார்க்கண்டில் சிறு குறு மற்றும் நடுத்தர விவசாயிகளுக்கு நிதியுதவி அளிப்பதற்கான திட்டங்கள் அறிவிக்கப்பட்டது. அதேபோல தெலங்கானாவிலும் ரிது பந்து திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதுபோன்ற காரணங்களால் 2019-20ஆம் நிதியாண்டில் மாநிலங்களின் சந்தைக் கடன் மதிப்பு ரூ.5.7 லட்சம் கோடியாக உயருமென்று *இந்திய மதிப்பீடு மற்றும் ஆராய்ச்சி* அறிக்கை கூறுகிறது.�,