இரண்டாவது நாளாகத் தொடரும் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தால் சென்னையில் காய்கறி விலை அதிகரித்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள சுங்கச் சாவடிகளை அகற்ற வேண்டும், பெட்ரோல் டீசல் விலையை ஜிஎஸ்டிக்குள் கொண்டுவர வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, லாரி உரிமையாளர்கள் ஜூலை 20 ஆம் தேதி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் மட்டும் 4.5 லட்சம் கனரக வாகனங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன. லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தால், கோயம்பேடுக்கு வரும் காய்கறிகளின் வரத்து குறைந்துள்ளது. இதனால், காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளது. கத்தரிக்காய் – ரூ.10 தக்காளி – ரூ.10 முருங்கைக்காய் – ரூ.20, பீன்ஸ் – ரூ.40, பாகற்காய் – ரூ.20, கேரட் – ரூ.35, பல்லாரி வெங்காயம் -ரு.20, அவரைக்காய் – ரூ.30, மிளகாய் – ரூ.40க்கு விற்கப்படுகிறது.
தூத்துக்குடியில் இரண்டாவது நாளாக 4 ஆயிரம் லாரிகள் நிறுத்தப்பட்டதால் துறைமுகத்தில் ஏற்றுமதி, இறக்குமதிப் பணிகள் முடங்கியுள்ளன. இதனால் பலகோடி ரூபாய் வர்த்தகப் பரிவர்த்தனை பாதிக்கப்பட்டுள்ளதாக வணிகர்கள் தெரிவித்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டத்தில் 10 கோடி ரூபாய் மதிப்புள்ள 5 கோடி முட்டைகள் தேக்கமடைந்திருப்பதாக கோழிப்பண்ணை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், நாளை முதல் வழக்கம் போல் தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கும் கேரளா, கர்நாடக மாநிலங்களுக்கும் கோழி முட்டைகள் அனுப்பப்படும் என அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். முதல் இரண்டு நாட்கள் மட்டும் வேலை நிறுத்தத்தில் பங்கேற்பதாக கோழிப்பண்ணை உரிமையாளர்கள் ஏற்கனவே தெரிவித்திருந்தனர்.
இதனால், கரூர் மாவட்டத்தில் ஜவுளி, பின்னலாடை, கொசுவலை உற்பத்தி பாதிப்படைந்துள்ளது. நாளொன்றுக்கு ரூ.30 கோடி வரை ஏற்றுமதி தேக்கமடையும் என டெக்ஸ்டைல்ஸ் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். இரண்டு நாட்களில் 200 கோடி மதிப்பிலான ஏற்றுமதி பின்னலாடைகள் தேக்கமடைந்துள்ளன. இதனால், லாரி ஸ்டிரைக்கை மத்திய மற்றும் மாநில அரசுகள் முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என ஏற்றுமதியாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்தப் போராட்டம் அடுத்த சில நாட்களுக்கு நீடித்தால் அத்தியாவசியப் பொருட்கள் உள்ளிட்ட அனைத்துப் பொருட்களின் விலை உயரும். நாளை (ஜூலை 22) தங்களது போராட்டத்துக்கு மக்கள் ஆதரவு தர வேண்டும் என லாரி உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.�,