பல முக்கிய வழக்குகளைக் கையாண்ட மகாராஷ்டிரா மாநில பயங்கரவாத தடுப்பு பிரிவு முன்னாள் தலைவர் ஹிமான்சு ராய் இன்று (மே 11) தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்.
மும்பையில் மலபார் ஹில்ஸில் உள்ள தனது வீட்டில், மதியம் 1.45 மணியளவில் வாயில் துப்பாக்கியால் சுட்டு ஹிமான்சு ராய் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்தச் சம்பவத்தை தொடர்ந்து அவர் மும்பை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார். ஆனால் ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவே அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மும்பையில் உள்ள கோலாபாவில் பிறந்த இவர் மும்பை செயின்ட் சேவியர் கல்லூரியில் பட்ட படிப்பை முடித்துள்ளார். மருத்துவராக முயற்சி செய்த ஹிமான்சு தந்தையின் அறிவுரையின் பேரில் சிஏ படித்துள்ளார். ஆர்தர் ஆண்டர்சன் என்ற நிறுவனத்தில் சிறிது காலம் பணியாற்றிவிட்டு. யுபிஎஸ்சி தேர்வை எழுதி தேர்ச்சி பெற்றுள்ளார்.
1991ஆம் ஆண்டு மாலேகான் பகுதியில் பணியில் சேர்ந்த ஹிமான்சு பாபர் மசூதி இடிபாடு கலவர வழக்கை விசாரித்துவந்தார். பின்னர், நாசிக் மற்றும் அஹ்மத் நகரில் போலீஸ் கண்காணிப்பாளராக பணியாற்றினார். தொடர்ந்து மும்பை காவல்துறை பொருளாதார குற்றச்சாட்டு துறையின் துணை ஆணையராகப் பதவி வகித்தார்.
2004 மற்றும் 2007ஆம் ஆண்டுக்கு இடையில் நாசிக் காவல் ஆணையராகப் பதவி உயர்வு பெற்றார். 2009ல் மும்பை குற்றப்பிரிவில் பணியில் சேர்ந்தார். மகாராஷ்டிரா பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவு (ஏ.டி.எஸ்) தலைவராகவும் இருந்தவர்.
தாவூத் சகோதரர் இக்பால் கஸ்கார் டிரைவர் அரிபின் துப்பாக்கிச் சூடு,பத்திரிகையாளர் ஜேடே கொலை, விஜய் பாலாண்டே, லைலா கான் இரட்டை கொலை வழக்கு உள்பட பல முக்கிய வழக்குகளைக் கையாண்டுள்ளார்.
2009 ஆம் ஆண்டு மும்பையின் குற்றப்பிரிவு தலைமை அதிகாரியாக ஹிமான்சு இருந்தபோதுதான், மும்பை தீவிரவாத தாக்குதலில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருந்த தீவிரவாதி அஜ்மல் கசாப்புக்குத் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.
இவ்வாறு பல முக்கிய வழக்குகளை விசாரித்து வந்த ஹிமான்சு தற்கொலை செய்து கொண்டது காவல்துறை வட்டாரங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாகப் புற்று நோயால் இவர் பாதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது அவரது உடல் மும்பை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. மருத்துவமனையைச் சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.�,