�
பணமதிப்பழிப்பு, ஜிஎஸ்டி ஆகிய சீர்திருத்த நடவடிக்கைகளால் ஏற்பட்ட பாதிப்புகளிலிருந்து இந்தியா முழுமையாக மீண்டு வந்துவிட்டதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.
தெற்காசிய பொருளாதாரச் செயல்பாட்டு மையம் என்ற தலைப்பில் உலக வங்கி ஏப்ரல் 15ஆம் தேதி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இந்தியா கடந்த ஐந்து காலாண்டுகளாக சந்தித்திருந்த சரிவு காரணமாக மிக வேகமாக வளரும் பொருளாதார மையம் என்ற சிறப்பை தெற்காசியா இழந்திருந்தது. இந்நிலையில் தற்போது வளர்ச்சி மீண்டும் திரும்பியுள்ளது. எனவே தெற்காசியாவின் பொருளாதார வளர்ச்சி 2018ஆம் ஆண்டில் 6.9 சதவிகிதமாகவும், 2019ஆம் ஆண்டில் 7.1 சதவிகிதமாகவும் இருக்கும். இந்தியாவைப் பொறுத்தவரையில் பணமதிப்பழிப்பு, ஜிஎஸ்டி ஆகிய நடவடிக்கைகளால் ஏற்பட்ட பாதிப்புகளிலிருந்து முழுவதும் மீண்டுள்ளது.
2018ஆம் ஆண்டில் இதன் வளர்ச்சி 7.3 சதவிகிதமாகவும், 2019ஆம் ஆண்டில் 7.5 சதவிகிதமாகவும் இருக்கும். மேலும், இந்தியா தனது வேலைவாய்ப்பு விகிதத்தைச் சரியாமல் காக்க ஆண்டு ஒன்றுக்கு சுமார் 81 லட்சம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கிட வேண்டும். இது சுலபமான காரியமல்ல; இந்தியா சிறப்பான பொருளாதார வளர்ச்சியைக் கொண்டிருந்தபோதும் வேலைவாய்ப்பு உருவாக்கத்தில் குறிப்பிடத்தகுந்த வளர்ச்சியைக் கொண்டிருக்கவில்லை. குறிப்பாகப் பெண்கள் பணிச் சந்தையிலிருந்து அதிகளவில் விலகிச் செல்வதாலேயே இந்தப் பின்னடைவு ஏற்படுகிறது. கிராமப் புற வேலைவாய்ப்பு உருவாக்கத்தில் இந்தியா அதிகக் கவனம் செலுத்த வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.�,