கர்நாடகா முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா, காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியநிலையில் பாஜக தலைவர் அமித் ஷா முன்னிலையில் இன்று பாஜக-வில் இணைகிறார்.
கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த எஸ்.எம்.கிருஷ்ணா, காங்கிரஸ் கட்சியில் மூத்த தலைவர். 1999 முதல் 2004ஆம் ஆண்டு வரை அம்மாநிலத்தின் முதல்வராக இருந்தார். அதேபோன்று, 2009ஆம் ஆண்டு வரை மகாராஷ்டிரா மாநிலத்தின் ஆளுநராக பணியாற்றினார். மேலும் காங்கிரஸ் கட்சி மத்தியில் ஆட்சியில் இருந்தபோது 2009ஆம் ஆண்டில் வெளியுறவுத்துறை அமைச்சராக பணியாற்றிய எஸ்.எம்.கிருஷ்ணா, இந்திரா காந்தி மற்றும் ராஜீவ் காந்தியின் அமைச்சரவையிலும் பணியாற்றிய சிறப்புமிக்கவர். ஆனால் காங்கிரஸ் கட்சியில் மூத்த தலைவர்களுக்கு மதிப்பில்லை என்றுகூறி, கடந்த மாதம் தனது கட்சிப் பொறுப்பை ராஜினாமா செய்தார்.
காங்கிரஸ் கட்சியின்மீது குற்றம்சாட்டிய எஸ்.எம்.கிருஷ்ணா பாஜக-வில் சேர்ந்துவிடுவார் என்று அரசியல் வட்டாரத்தில் எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், அவர் இன்று பாஜக தலைவர் அமித் ஷா முன்னிலையில் பாஜக-வில் இணையவுள்ளார்.
கடந்த 15ஆம் தேதியே அவர் பாஜக-வில் இணைய திட்டமிட்டிருந்த நிலையில், திடீரென அவரது சகோதரி மரணம் அடைந்ததால் பாஜக-வில் இணையும் தேதி தள்ளிப்போனதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.�,