உள்ளாட்சி தேர்தல் வரும்போது பாஜகவுடனான கூட்டணி குறித்து பரிசீலிக்கப்படும் என்று, காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அதிமுகவின் இரு அணிகளும் இணைவதில் பாஜகவின் பங்கு அதிகமாக இருந்தது என்று பரவலாக கருத்துக்கள் கூறப்பட்டு வரும் நிலையில், கடந்த 3ஆம் தேதி நடைபெற்ற மத்திய அமைச்சரவை மாற்றத்தில் அதிமுகவும் பங்குபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் இடம்பெறவில்லை. தொடர்ந்து நீட் தேர்வு விவகாரம், ஹைட்ரோகார்பன் திட்டம் என மத்திய அரசின் திட்டங்களுக்கு எதிராக மென்மையான விமர்சனங்களை கூட தமிழக அரசு முன்வைக்கவில்லை.
இதற்கிடையே சென்னை நந்தனத்தில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, பாஜகவுடன் நாங்கள் ஏற்கனவே கூட்டணி அமைத்துள்ளோம். உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைப்பதில் எந்த தவறும் இல்லை’ என்று தெரிவித்திருந்தார்.
இந்த சூழ்நிலையில் இன்று (செப்டம்பர் 9)காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம், பாஜகவுடனான கூட்டணி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது, அதற்கு பதிலளித்த அவர், இன்னும் தேர்தலே வரவில்லை, அதற்குள் எப்படி கூட்டணி குறித்து பேச முடியும். தேர்தல் வரும்போது பாஜகவுடனான கூட்டணி குறித்து நாம் பரிசீலிப்போம். பொதுக்குழு கூடுவது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது, 14 ஆம் தேதி அது விசாரணைக்கு வரவுள்ளது. வந்தபிறகு அதுகுறித்து பேச இயலும். தற்போதைய அதிமுக அரசு 134 சட்டமன்ற உறுப்பினர்களோடு பெரும்பான்மையாகத்தான் உள்ளது’ என்று தெரிவித்துள்ளார்.�,