சிபிஐ சோதனை தொடர்பாக மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கூறியுள்ளது அவரது சொந்த கருத்தென்றும் அரசுக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லையென்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி சேலம் விமானநிலையத்தில் செய்தியாளர்களை இன்று சந்தித்தார். அப்போது அவர், “மேகதாதுவில் அணை கட்டக்கூடாது என்பதுதான் தமிழகத்தின் நிலைப்பாடு. தமிழகத்தில் கடுமையான வறட்சி நிலவியபோது குடிப்பதற்கு கூட தண்ணீர் தர கர்நாடகா மறுத்துவிட்டது. தற்போது மேலும் ஒரு அணை கட்டப்பட்டால் தமிழகம் கடுமையாக பாதிக்கப்படும்” என்று தெரிவித்தார்.
பாலாறு அருகே அணைகள் கட்டப்பட்டு வருவதை சட்டப்பூர்வமாக சந்திப்போம் என்றும் குறிப்பிட்டார்.
அமைச்சர் விஜயபாஸ்கர் மீது ஊழல் புகார்கள் அதிகரித்துள்ள நிலையில், நடவடிக்கை எடுக்காதது ஏன்ற கேள்விக்கு, “குற்றச்சாட்டு கூறப்படுவதாலேயே ஒருவர் குற்றவாளி ஆகிவிட முடியாது. இந்த ஆட்சி சிறப்பாக நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது. வேண்டுமென்றே திட்டமிட்டு ஊழல் குற்றச்சாட்டுகளை பரப்பி வருகின்றனர். எந்தத் துறையில் தவறு நடைபெற்றதாக எங்களுக்குப் புகார் வரவில்லை” என்று பதிலளித்தார்.
திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலுக்காக அதிமுக பணம் கொடுக்க தொடங்கிவிட்டது தவறான தகவல் என்று தெரிவித்த முதல்வர், “நாடாளுமன்ற தேர்தலில் கடந்த முறை பெற்ற வெற்றியை அதிமுக பெறும். பல்வேறு திட்டங்களை செயல்படுத்த வேண்டியுள்ளது. அதற்கு மத்திய அரசின் நிதி தேவையாகவுள்ளது. எனவே,யார் எங்களுக்கு உதவி செய்கிறார்களோ அவர்களுக்கு நாங்கள் துணை நிற்போம்” என கூறினார்.
”பெட்ரோல்,டீசல் விலையை மத்திய அரசுதான் உயர்த்துகிறது. தமிழக அரசுக்கு போதிய நிதி தேவையாகவுள்ளது. எனவே, எரிபொருள் மீதான வரியைக் குறைப்பது தொடர்பாக அரசு சிந்திக்கும்” என்று முதல்வர் தெரிவித்தார்.
சிபிஐ சோதனைகளுக்கு மத்திய அரசுதான் காரணம் என்பது தம்பிதுரையின் தனிப்பட்ட கருத்தாக இருக்கலாம். அரசின் கருத்து அதுவல்ல. மத்திய அரசோடு இணக்கமாக இருந்து தமிழகத்துக்கு தேவையான திட்டங்களை செயல்படுத்துவதே எங்களின் விருப்பம்” என்று தெரிவித்தார்.�,