டாஸ்மாக் போராட்டம் : பெண்களுக்கு எதிராக வழக்கு!

public

டாஸ்மாக் மதுக்கடைக்கு எதிராகப் போராடும் பெண்களைக் கைது செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது,

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின் வாக்குறுதிப்படி தமிழக அரசு சில டாஸ்மாக் கடைகளை மூடியது. இதையடுத்து, மதுவால் ஏற்படும் விபத்துகளைத் தவிர்ப்பதற்காக நெடுஞ்சாலைகளில் உள்ள டாஸ்மாக் உள்ளிட்ட மதுக் கடைகளை அகற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த உத்தரவுப்படி, நெடுஞ்சாலைகளில் இருந்த சுமார் 3000-க்கும் மேற்பட்ட கடைகள் மூடப்பட்டன. அவ்வாறு மூடப்பட்ட கடைகளை பொது மக்கள் வாழும் பகுதிகளில் திறப்பதற்கு தமிழக அரசு முயற்சி செய்து வருகிறது. இதனை எதிர்த்து பொதுமக்களும் பெண்களும் போராடி வருகின்றனர். சில இடங்களில் டாஸ்மாக் கடைகளில் உள்ள மதுபாட்டில்களை உடைத்தும், கடைகளைச் சூறையாடியும் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

இந்நிலையில் மதுக்கடைக்கு எதிராகப் போராடும் பெண்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த கே.கே,ரமேஷ் என்பவர் தொடர்ந்த வழக்கில் கூறியிருப்பதாவது,” தமிழக அரசுக்கு சுமார் 30ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் ஈட்டித்தரும் முக்கியத் துறை டாஸ்மாக் ஆகும். ஆனால் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் அரசுக்கு சொந்தமான டாஸ்மாக் கடைகள் உடைக்கப்பட்டுச் சேதப்படுத்தப்படுகின்றன.

மதுக்கடைகளை மூட வேண்டுமானால் முதலில் அந்தந்த மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு நடவடிக்கை எடுக்கவில்லையெனில் நீதிமன்றத்தை அணுக வேண்டும். ஆனால் இதைத்தவிர்த்து வன்முறையில் ஈடுபடக்கூடாது.

அவ்வாறு டாஸ்மாக் கடைகள் மற்றும் அரசு சொத்துகளை சேதப்படுத்தி போராட்டத்தில் ஈடுபடும் பெண்கள் மற்றும் பொதுமக்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என கடந்த மே 3ஆம் தேதி தமிழக தலைமை செயலாளர், காவல் துறைத் தலைவர் ஆகியோருக்கு மனு அனுப்பியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே பொது சொத்துகளை சேதப்படுத்தி டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக போராடும் பெண்கள் மற்றும் மக்களை கைது செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிடவேண்டும் என கூறியுள்ளார்.

இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் ஏ.செல்வம், என்.ஆதிநாதன் ஆகியோரது அமர்வு முன் ஜூன்-2 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் டாஸ்மாக் போராட்டம் தொடர்பாக இதுவரை எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன? என கேள்வி எழுப்பினர். இது குறித்து தமிழக தலைமை செயலாளர், தமிழக காவல் துறைத் தலைவர் பதிலளிக்க வேண்டும் என்று கூறி வழக்கு விசாரணையை ஜூலை 3 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *