X
குழந்தைகள் மீதான பாலியல் குற்றப் புகார்கள் மீது 24 மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.
இது குறித்து நேற்று (டிசம்பர் 30) திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையர் ஆனந்த், தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் கீழ் குழந்தைகள் மீதான பாலியல் குற்றப் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ள குழு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். “கடந்த மாதத்தில் மட்டும் நாடு முழுவதும் இது குறித்து 110 புகார்கள் வந்துள்ளன. இதில், தமிழகத்தில் சென்னை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து இரண்டு புகார்கள் வந்துள்ளன.
இது போன்ற புகார்கள் மீது விசாரணை மேற்கொள்ள குழந்தைகள் நலன், குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, குழந்தைகளுக்கான கல்வி உரிமை, குழந்தைகளுக்கான நீதி உள்ளிட்ட ஆறு துறை சார்ந்த அதிகாரிகள் பணி அமர்த்தப்பட்டுள்ளனர். குழந்தை பாலியல் வ்னமுறை குறித்து [இந்த](www.ncpcr@nic.in) இணையதளம் மூலம் புகார் அளிக்கலாம். இந்தியாவில், குழந்தைகள் மீதான குற்றங்களைத் தடுக்கும் நோக்கில் நடவடிக்கை எடுக்க Quick Response Cell (QRC) என்கிற குழு இயங்கி வருகிறது” என தெரிவித்தார்.
சமீபத்தில், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோருக்கு போக்சோ சட்டத்தின் கீழ் கடுமையான தண்டனை விதிக்கும் வகையில் போக்சோ சட்டத்தில் கொண்டுவரப்பட்ட திருத்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.�,