இரட்டை இலையின் இறுதி விசாரணை இன்று டெல்லி தலைமை தேர்தல் ஆணையத்தில் நடைபெறவுள்ள நிலையில், இன்றுதான் கடைசி கட்ட விசாரணை நடைபெற உள்ளது என்று கூறப்படுகிறது. இதில் இரட்டை இலை சம்பந்தமாகத் தேர்தல் ஆணையம் முடிவெடுத்துவிடும் என்றும் கூறப்படுகிறது.
இந்தச் சூழ்நிலையில் விசாரணையில் பங்கெடுப்பதற்காக நேற்றைய தினம் (அக்டோபர் 29) கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், மனோஜ் பாண்டியன், மைத்ரேயன் உள்ளிட்ட பன்னீர்செல்வம் அணியினர் தனியாக டெல்லி சென்றனர். அங்குச் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி, “தங்களுக்கு வேண்டியது கிடைக்காத காரணத்தினால் தினகரன் தரப்பு தவறான தகவல்களைக் கூறுகிறது. எங்கள் தரப்பிலிருந்து மிரட்டி பிரமாணப் பத்திரங்கள் வாங்கினார்கள் என்றால், ஏன் அதுகுறித்து சம்பந்தப்பட்டவர்கள் காவல்துறையில் புகார் அளிக்கவில்லை.
தேர்தல் ஆணையத்தில் நாங்கள் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரங்களை தினகரன் தரப்பு நேரடியாக ஆய்வு செய்தாலும், உண்மை நிலை அங்கு சரியாக இருந்துவருகிற காரணத்தினால், நிச்சயம் தினகரன் தரப்புக்கு வெற்றி கிடைக்காது. ஏழு பேரை அவர்கள் குறிப்பிட்டு சொல்கிறார்கள் என்றால், அந்த ஏழு பேரும் அவர்களிடம் நீண்ட காலம் பழகிய காரணத்தினால் தங்களுடைய நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டிருக்கலாம். ஆனால் 1,887 பொதுக்குழு உறுப்பினர்களில் ஏழு என்பது சிறுபான்மைதான்.”
“ஸ்லீப்பர் செல் என்று தினகரன் கூறுகிறாரே அவர்கள் இந்த ஏழு பேராக இருக்கலாமோ?” என்ற செய்தியாளரின் கேள்விக்கு, “தினகரன் வேலையில்லாமல் தன்னை நிலைநிறுத்துவதற்காக இப்படி பேசி வருகிறார். கட்சியில் இல்லாத ஒரு நபரின் கேள்விக்குப் பதில் சொல்லத் தேவையில்லை.
இந்த வழக்கு என்பது சசிகலாவுக்கும், பன்னீர்செல்வம் அணிக்கும் இடையில் நடப்பது. தினகரன் இதில் கிடையாது. தற்போது இந்த வழக்கில் எங்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் இணைந்துள்ளார். எனவே எங்களுக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்கும் என்று முழுமையாக நம்புகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
முன்பு அதிமுகவில் இரு அணிகளும் இணைவதற்குத் தடையாக கே.பி.முனுசாமி இருந்தார் என்று கூறப்பட்டு வந்த நிலையில், ‘பன்னீர்செல்வம்தான், எடப்பாடி தரப்பில் இணைந்தார்’ என்று அனைத்து தரப்பிலும் கூறி வருகின்றனர். ஆனால் கே.பி.முனுசாமியோ, ‘எங்கள் தரப்புடன்தான், முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணியினர் இணைந்துள்ளனர்’ என்று கூறியுள்ளது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.�,