டிக்கெட் கட்டண அபராதம் மூலமாக இந்திய ரயில்வே துறை இதுவரையில் ரூ.1,097 கோடி வசூலித்துள்ளது.
இந்திய ரயில்களில் பயண டிக்கெட் இல்லாமல் பயணம் செய்பவர்களைக் கட்டுப்படுத்த சோதனைகள் மூலம் ரயில்வே துறை உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அவ்வாறு பயணிக்கும் பயணிகளுக்குக் குறிப்பிடத்தகுந்த அபராதமும் விதிக்கப்படுகிறது. அந்த வகையில், 2017 ஏப்ரல் முதல் 2018 பிப்ரவரி வரையில் அபராதம் மூலம் ரயில்வே துறை ரூ.1,097 கோடி வசூல் செய்துள்ளது. மேலும், நடப்பு மார்ச் மாதத்தில் அபராதம் வாயிலாக இன்னும் ரூ.200 கோடி வசூலாகும் என எதிர்பார்ப்பதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது. டிசம்பர் மாதத்தில் மட்டும் அதிகபட்சமாக ரூ.850 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. இவ்வாறாக, அபராதம் மூலம் ரூ.1,000 கோடிக்கும் மேல் வசூலித்து உலகின் நான்காவது மிகப்பெரிய ரயில்வே துறையான இந்திய ரயில்வே துறை சாதனைப் படைத்துள்ளது.
அபராதம் வாயிலான ரயில்வே துறையில் வருவாய் அதிகரித்திருந்தாலும், நடப்பு நிதியாண்டுக்கான ரயில்வே துறையின் ஒட்டுமொத்த வருவாய் இலக்கை அடைவது சிரமமான ஒன்றாகியுள்ளது. 2017-18 நிதியாண்டில் மொத்தம் ரூ.1.80 லட்சம் கோடி வருவாய் ஈட்ட இந்திய ரயில்வே துறை இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. ஆனால் இந்த நிதியாண்டு நிறைவு பெற இன்னும் சில நாட்களே மீதமிருக்கும் நிலையில் வருவாய் இலக்கை அடைவது கடினமாகியுள்ளது. அதாவது, வருவாய் இலக்கில் ரூ.34,168 கோடி குறைவான அளவே எட்டப்பட்டுள்ளது. 2016-17 நிதியாண்டில் மொத்தம் ரூ.1.65 லட்சம் கோடி வருவாய் ஈட்ட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.�,