தலைமை நீதிபதிக்கு எடப்பாடி பழனிசாமி நேரில் வாழ்த்து!

politics

சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்ற முனீஸ்வர்நாத் பண்டாரிக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நேரில் வாழ்த்து தெரிவித்தார்.

சென்னை உயர் நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்த முனீஸ்வர்நாத் பண்டாரியைத் தலைமை நீதிபதியாக நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து, பதவியேற்பு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வந்தது.

பதவியேற்பு விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, தமிழக முதல்வர் மு. க ஸ்டாலின் ஆகியோர் பங்கேற்கிறார்கள் என்று கூறப்பட்ட நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோரும் இவ்விழாவில் பங்கேற்பார்கள் என்று தகவல் வெளியானது.

இதுகுறித்து மின்னம்பலத்தில், [தலைமை நீதிபதி பதவியேற்பு விழாவில் எதிர்க்கட்சித் தலைவர்கள்!](https://minnambalam.com/politics/2022/02/13/18/Madras-%20high%20court-%20chief%20justice-%20munishwarnath-%20Bhandari-%20function-%20governor-%20chief-minister-%20edapadi-%20paneer) என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

அதன்படி இன்று காலை ஆளுநர் மாளிகையில் நடந்த தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி பதவி ஏற்பு விழாவில் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு நேரில் வாழ்த்து தெரிவித்தார்.

இதுகுறித்து அதிமுக அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி, ஆளுநர் மாளிகையில், சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பதவியேற்ற நீதியரசர் முனீஸ்வர் நாத் பண்டாரிக்குப் பொன்னாடை அணிவித்து, பூங்கொத்து வழங்கி வாழ்த்து தெரிவித்தார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதுதொடர்பான புகைப்படங்களும் பகிரப்பட்டுள்ளது.

அப்போது ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் ஸ்டாலின் ஆகியோரும் மேடையில் இருந்தனர்.

**-பிரியா**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *